ஆன்மிகம்
புதுச்சேரி தூய இருதய ஆண்டவர் ஆலயத்தில் நடந்த சிலுவைப்பாதை வழிபாட்டில் கிறிஸ்தவர்கள் பங்கேற்றபோது எடுத்தபடம்.

தூய இருதய ஆண்டவர் ஆலயத்தில் சிலுவைப்பாதை வழிபாடு

Published On 2021-04-03 04:10 GMT   |   Update On 2021-04-03 04:10 GMT
தூய இருதய ஆண்டவர் ஆலயத்தில் சிலுவைப்பாதை வழிபாடு நேற்று நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.
ஏசு கிறிஸ்துவின் சிலுவை பாடுகள் மற்றும் மரணத்தை நினைவுக்கூறும் வகையில் கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் 40 நாட்கள் தவக்காலம் அனுசரித்து வருகின்றனர். இந்த ஆண்டுக்கான தவக்காலம் கடந்த பிப்ரவரி மாதம் 17-ந் தேதி சாம்பல் புதன் தினத்தன்று தொடங்கியது.

தவக்காலத்தின் கடைசியில் ஏசு உயிர்நீத்த தினமான புனித வெள்ளி நேற்று கடைபிடிக்கப்பட்டது. புனித வெள்ளியை முன்னிட்டு புதுவையில் உள்ள அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களிலும் சிலுவைப்பாதை மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடந்தன.

புதுவை ரெயில் நிலையம் அருகில் உள்ள தூய இருதய ஆண்டவர் ஆலயத்தில் ஏசு கிறிஸ்துவின் சிலுவை பாடுகளை நினைவுகூறும் வகையில் ஏசு சிலுவையைச் சுமப்பது போன்ற சொரூபம் ஆலயத்தைச் சுற்றி பவனியாக எடுத்து வரப்பட்டது. இந்த சிலுவைப் பாதை ஊர்வலத்தில் கிறிஸ்தவர்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

புதுவை தூய இருதய ஆண்டவர் ஆலயத்தில் பங்கு தந்தை குழந்தைசாமி அடிகளார் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை மற்றும் சிலுவைப்பாதை வழிபாடு நடந்தது.

இதே போல் புதுவையில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் நேற்று சிறப்பு சிலுவை பாதை நிகழ்ச்சி நடந்தது.

புதுச்சேரி அரசு பொதுமருத்துவமனை அருகே உள்ள சி.எஸ்.ஐ. தூய யோவான் ஆலயத்தில் நேற்று காலை 11 மணிக்கு மும்மணி நேர தியான ஆராதனை நடந்தது. இதில் தலைமை போதகர் ஹென்ரி ஜெபா ரிச்சர்டு கலந்து கொண்டு பிரார்த்தனை நடத்தினார். அப்போது 7 திருவசனத்தின் அடிப்படையில் 7 பேர் அருளுரை வழங்கினர்.

அரியாங்குப்பம் புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் புனித வெள்ளி வழிபாடு நேற்று நடைபெற்றது. இதில் அரியாங்குப்பம் பங்குதந்தை அந்தோணிரோச் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. முன்னதாக சிலுவை வழிபாடு, சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு பிரர்த்தனை செய்தனர்.

இதேபோல் முருங்கப்பாக்கம் மாதா கோவில், கொருக்கமேடு புனித அன்னம்மாள் ஆலயம் உள்ளிட்ட பல்வேறு கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

மேலும், மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து ஆலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இந்த வழிபாடுகளில் திரளான கிறிஸ்தவ மக்கள் கலந்து கொண்டனர்.

கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு சிலுவைப்பாதை வழிபாடுகள் நடைபெறவில்லை. இந்த ஆண்டு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் சிலுவைப்பாதை வழிபாடுகள் நடந்தன. இதில் முககவசம் அணிந்து திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஏசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு இன்று (சனிக்கிழமை) நள்ளிரவு அனைத்து ஆலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன.
Tags:    

Similar News