ஆன்மிகம்
கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

Published On 2021-04-03 03:50 GMT   |   Update On 2021-04-03 03:50 GMT
புனித வெள்ளியையொட்டி மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு 3-ம் நாள் உயிரோடு எழுந்தார் என்று கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிள் கூறுகிறது. அதை கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடி வருகிறார்கள். ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட தினத்தை புனித வெள்ளியாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று புனித வெள்ளி என்பதால், அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளில் இருக்கும் கிறிஸ்தவ ஆலயங்களில் நேற்று சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இந்த பிரார்த்தனையின்போது ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு தொங்கியபோது பேசின 7 வார்த்தைகள் குறித்து தியானிக்கப்பட்டது.

மேட்டுப்பாளையம் சி.எஸ்.ஐ. தூய யோவான் ஆலயத்தில் ஆயர் கோபிநாத் தலைமையில் பிரார்த்தனை நடந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். அதுபோன்று சிலுவை பாதை வழிபாடு, சிலுவை ஆராதனையும் நடந்தது. மேட்டுப்பாளையத்தில் உள்ள புனித அந்தோணியார் ஆலயத்தில் நடந்த பிரார்த்தனைக்கு பஙகு குரு ஹென்றி லாரன்ஸ் தலைமை தாங்கி நடத்தினார்.

பின்னர் சிலுவை பவனி நடந்தது. ஆலயம் முன்பு தொடங்கிய பவனி, ஆலயத்தை சுற்றி ஆலயம் முன்பு வந்து முடிந்தது. இதில் கலந்து கொண்டவர்கள் தங்கள் கைகளில் சிலுவைகளை ஏந்திய படி சென்றனர். இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். அதுபோன்று காரமடை, அன்னூர், சிறுமுகை மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளில் இருக்கும் கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. மேலும் ஈஸ்டர் பண்டிகையை யொட்டி நாளை (ஞாயிற்றுக்கிழமை) சிறப்பு பிரார்த்தனையும் நடக்கிறது.
Tags:    

Similar News