சினிமா செய்திகள்

ஆர்யா பார்வதி

47 வயதில் குழந்தை பெற்ற தாய்.. இப்போது வெட்கப்படவில்லை என பிரபல நடிகை கருத்து

Published On 2023-03-22 09:57 GMT   |   Update On 2023-03-22 09:57 GMT
  • கேரளாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஆர்யா பார்வதி.
  • டெலிவிஷன் தொடர்களில் நடித்து வந்த ஆர்யா பார்வதி பின்னர் சினிமாவிலும் நடிக்க தொடங்கினார்.

கேரளாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஆர்யா பார்வதி. மலையாள டெலிவிஷன் தொடர்களில் நடித்து பிரபலமான இவர் கல்லூரியில் படிக்கும் போதே மோகினியாட்டத்தில் தொடர்ந்து 3 ஆண்டுகள் வெற்றி பெற்றவர். டெலிவிஷன் தொடர்களில் நடித்து வந்த ஆர்யா பார்வதி பின்னர் சினிமாவிலும் நடிக்க தொடங்கினார். குறுகிய காலத்தில் புகழின் உச்சிக்கு சென்றார்.

நடிகை ஆர்யா பார்வதியின் தாயாருக்கு 47 வயதாகிறது. சமீபத்தில் இவருக்கு அழகான குழந்தை பிறந்தது. இது ஊடகங்களில் வெளியானதும், நடிகை ஆர்யா பார்வதியின் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மகள் சினிமாவில் நடிகையாக கலக்கி வரும் நிலையில் அவரது தாயாருக்கு குழந்தை பிறந்துள்ளதே என்று பலரும் வியப்புடன் கருத்து தெரிவித்தனர்.

நடிகை ஆர்யா பார்வதியின் தாயாருக்கு குழந்தை பிறந்தது பற்றியும், அதனை விமர்சித்தும், ஆதரித்தும் பலர் இணையத்தில் கருத்து பதிவிட்டுவந்ததற்கு நடிகை ஆர்யா பார்வதி எந்த பதிலும் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் அவர் கர்ப்பமாக இருக்கும் தாயாரின் வயிற்றில் சாய்ந்திருக்கும் புகைப்படத்தை தற்போது சமூக வலைதளத்தில் பதிவிட்டார். அதில் முதலில் அதிர்ச்சி அடைந்த நான், இப்போது மகிழ்ச்சியாக உள்ளேன் என்று குறிப்பிட்டு இருந்தார்.


கர்ப்பிணி தாயாருடன் நடிகை ஆர்யா பார்வதி

அந்த பதிவில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:- எனது தாயார் கர்ப்பமாக இருப்பது தெரியவந்ததும் இதனை என்னிடம் சொல்ல அப்பாவும், அம்மாவும் தயங்கினர். இந்த விஷயத்தை நான் எப்படி எடுத்து கொள்வேன் என்று குழப்பம் அடைந்தனர். ஆனால் இதனை என்னிடம் சொல்லாமல் நீண்ட நாள் மறைக்க முடியாது என்பதால் அவர்கள் அதனை தயக்கத்துடன் என்னிடம் தெரிவித்தனர்.

என் பெற்றோர் இந்த விஷயத்தை கூறியதும் முதலில் எனக்கு அதிர்ச்சியாகத்தான் இருந்தது. அதன்பின்பு எதார்த்தத்தை புரிந்து கொண்டேன். இதற்காக நான் ஏன் வெட்கப்பட வேண்டும் என என்னை நானே கேட்டுக்கொண்டேன். எனது தயக்கம் உடைந்ததும் அடுத்து எனக்கு வர இருக்கும் சகோதரனை வரவேற்க தயாராகிவிட்டேன். இப்போது எனக்கு இளைய சகோதரன் வந்து விட்டான்.மகிழ்ச்சியாக இருக்கிறது, என கருத்து பதிவிட்டுள்ளார். தனது தாயாருக்கு குழந்தை பிறந்த தகவலையும், அதனை தான் முதலில் ஏற்க தயங்கி பின்னர் அதனை ஏற்றுக்கொண்டதையும் தயக்கமின்றி நடிகை ஆர்யா பார்வதி பொதுவெளியில் கூறியிருப்பதற்கு பலரும் பாராட்டு தெரிவித்து உள்ளனர்.சமூக வலைதளங்களிலும் இதற்கு பாராட்டு குவிந்து வருகிறது.

Tags:    

Similar News