இறுதியாக மனம் திறந்த ஐஸ்வர்யா லட்சுமி.. வெளியான பதிவு..
- பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் தனக்கான அடையாளத்தை பெற்று கொண்டவர் ஐஸ்வர்யா லட்சுமி.
- இவர் சமீபத்தில் நடித்த ‘கட்டா குஸ்தி’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
மலையாள நடிகையான ஐஸ்வர்யா லட்சுமி ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில், அழுத்தமான வேடங்களில் நடித்து, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். விஷால் நடிப்பில் வெளியான 'ஆக்ஷன்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் தொடர்ந்து தனுஷ் நடிப்பில் வெளியான 'ஜகமே தந்திரம்' என்ற படத்தில் ஈழத் தமிழில் பேசி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.
அர்ஜுன் தாஸ் - ஐஸ்வர்யா லட்சுமி
பொன்னியின் செல்வன்' திரைப்படத்தில் இவர் நடித்திருந்த பூங்குழலி கதாபாத்திரம் பெரும் வரவேற்பை பெற்று இவருக்கான ஒரு அடையாளத்தை கொடுத்தது. தொடர்ந்து இவர் நடித்த 'கட்டா குஸ்தி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. நடிகை ஐஸ்வர்யா லட்சுமி 'கைதி', 'மாஸ்டர்' உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமடைந்த நடிகர் அர்ஜுன் தாஸுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் 'இதய' குறியீடுடன் பகிர்ந்திருந்தார்.
ஐஸ்வர்யா லட்சுமி பதிவு
இதற்கு இருவரின் ரசிகர்களும் 'காதலுக்கு வாழ்த்துக்கள்' என கமெண்ட் செய்து வந்தனர். இந்நிலையில், ஐஸ்வர்யா லட்சுமி, தனது இணையப் பக்கத்தில் முந்தைய பதிவிற்கு விளக்கமளித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "நண்பர்களே எனது கடைசி பதிவு இவ்வளவு வைரலாகும் என்று எதிர்பார்க்கவில்லை. நாங்கள் சந்திக்க நேர்ந்தது, அதனால் ஒரு படத்தை கிளிக் செய்து பதிவிட்டேன். நாங்கள் இருவரும் நண்பர்கள் தான். நேற்று முதல் எனக்கு குறுஞ்செய்தி அனுப்பும் அனைத்து அர்ஜூன் தாஸ் ரசிகர்களுக்கு "அவர் உங்களுடையவர்" என்று பதிவிட்டுள்ளார்.