சினிமா
‘சக்ரா’ படத்திற்கு ஐகோர்ட்டு விதித்திருந்த இடைக்காலத் தடை நீக்கம்
எம்.எஸ்.ஆனந்த் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள சக்ரா படத்திற்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை நீக்கப்படுவதாக ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
விஷால் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் திரைப்படம் ‘சக்ரா’. எம்.எஸ்.ஆனந்த் இயக்கியுள்ள இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ளார். மேலும் ரெஜினா, ரோபோ சங்கர், சிருஷ்டி டாங்கே, மனோபாலா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இப்படம் பிப்.19-ந் தேதி தியேட்டர்களில் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், டிரைடண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் சக்ரா படத்தை வெளியிட ஐகோர்ட்டு இடைக்காலத் தடை விதித்தது. இதனால் படம் திட்டமிட்டபடி வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது.
இந்நிலையில், அந்த வழக்கின் மீதான விசாரணை இன்று மீண்டும் நடைபெற்றது. அப்போது சக்ரா படத்தின் மீதான தடை நீக்கப்படுவதாக ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்தது. இதன்மூலம் படம் திட்டமிட்டபடி நாளை 4 மொழிகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.