சினிமா
திரெளபதி படக்குழு

திரெளபதி படத்திற்கு தடை கோரி கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார்

Published On 2020-01-07 12:40 IST   |   Update On 2020-01-07 12:40:00 IST
மோகன் இயக்கத்தில் ரிச்சர்டு, ஷீலா ராஜ்குமார் நடிப்பில் உருவாகி வரும் ‘திரெளபதி’ படத்தை தடை செய்யக்கோரி கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை வேப்பேரியில் உள்ள போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் ராம கிருஷ்ணன் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:- கடந்த 2-ந் தேதி ‘திரெளபதி’ என்ற திரைப்படத்தின் முன்னோட்டம் யூடியூப் மற்றும் சமூக வலைத்தளங்களில் வெளியானது. இந்த திரைப்படத்தை மோகன் என்பவர் இயக்கியுள்ளார்.

மிகவும் அதிர்ச்சியளிக்கும் விதமாக சாதி மறுப்பு திருமணங்கள் அனைத்துமே நாடக காதலாக நடக்கிறது. சாதி மறுப்பு திருமணம் செய்பவர்களை ஆணவப்படுகொலை செய்வதை ஒரு வேலையாகவே செய்ய வேண்டும் என்று வசனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. 4 ஆண்டுகளில் மட்டும் தமிழகத்தில் 90-க்கும் மேற்பட்ட ஆணவக்கொலைகள் நடைபெற்றுள்ளது என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.



தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கிற்கே ஊறு விளைவிக்கும் மிக பெரும் பிரச்சினையாக ஆணவப்படுகொலை கடந்த சில ஆண்டுகளாக மாறியுள்ள நிலையில், ஆணவப்படுகொலைகளை நியாயப்படுத்தி ஒரு திரைப்படம் வெளியாக உள்ளது. எனவே இந்த திரைப்படத்துக்கு தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Similar News