சினிமா
ரம்யா கிருஷ்ணன்

குயின் இணையதள தொடருக்கு தடை இல்லை - ஐகோர்ட்டு உத்தரவு

Published On 2020-01-03 12:20 GMT   |   Update On 2020-01-03 12:20 GMT
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறான குயின் என்ற இணையதள தொடருக்கு தடை இல்லை என்று ஐகோர்டு உத்தரவு விட்டுள்ளது.
உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால், ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட குயின் இணையதள தொடருக்கு தடை விதிக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் ஜோசப் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

இந்த மனுவை நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆர்.ஹேமலதா ஆகியோர் விசாரித்தனர்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் போது பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படத்திற்கு இந்திய தேர்தல் ஆணையம் தடை விதித்தது. அதுபோல குயின் இணையதள தொடருக்கு தடை விதிக்க வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இதற்கு பதில் அளித்த இந்திய தேர்தல் ஆணையம், ‘மனுதாரரின் மனுவைப் பொறுத்தவரை, தொடரை பார்த்து, அது கற்பனை கதையா? உண்மை சம்பவமா? என்பது உள்ளிட்ட விவரங்களை ஆராய்ந்து தான் முடிவெடுக்க முடியும்’ என்று வாதிடப்பட்டது.



இந்த தொடரை இயக்கிய இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் தரப்பில், ‘நரேந்திர மோடி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டதால், அவரது வாழ்க்கை வரலாற்று கதை கொண்ட திரைப்படத்துக்கு தடை விதிக்கப்பட்டது.

ஆனால். குயின் தொடரை பொருத்தவரை கடந்த 2017-ம் ஆண்டு வெளியான நாவலின் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ளது. இது உண்மை சம்பவத்தை தழுவிய கற்பனை கதை என்று வாதிடப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், குயின் இணையதள தொடரினால், உள்ளாட்சி தேர்தலுக்கு எந்த பாதிப்பும் வராது. எனவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறேன். குயின் தொடருக்கு தடை இல்லை’ என்று உத்தரவிட்டனர்.
Tags:    

Similar News