சினிமா
பேனர் கட்டும்போது விபரீதம்...... பிரபாஸ் ரசிகர் மின்சாரம் தாக்கி பலி
தெலுங்கானாவில் பிரபாஸ் படத்துக்கு பேனர் கட்டும்போது மின்சாரம் தாக்கியதில் ரசிகர் ஒருவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுஜித் இயக்கத்தில் பிரபாஸ், ஷ்ரத்தா கபூர், அருண் விஜய் உள்ளிட்டோர் நடித்த படம் சாஹோ. சுமார் 300 கோடி பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் இப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. பாகுபலி படத்துக்கு பின்னர் இந்த படம் வெளியாவதால் திரையரங்குகளில் பிரபாஸ் ரசிகர்கள் பேனர்கள், கட் அவுட்கள் என்று கொண்டாடி வருகிறார்கள். ரசிகர்கள் கொண்டாட இரவு 1 மணிக்கே காட்சி போடலாம் என அரசு அனுமதி அளித்துள்ளது.
இந்நிலையில், தெலுங்கானாவில் உள்ள திரையரங்கம் ஒன்றில் பிரபாஸின் ரசிகர் ஒருவர் பேனர் கட்டிய போது மின்சார ஒயர் உரசியதால் மின்சாரம் பாய்ந்ததில் தியேட்டர் கட்டிடத்தில் இருந்து கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், விசாரணை நடத்தி உள்ளார்கள். பிரேத பரிசோதனைக்கு அந்த நபரின் உடல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவர் பற்றிய விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை.