சினிமா
குடும்பத்தினருடன் அமிதாப் பச்சன்

ரூ.2,800 கோடி சொத்துகளை மகனுக்கும், மகளுக்கும் சமமாக பிரித்து கொடுப்பேன்- அமிதாப் பச்சன் உறுதி

Published On 2019-08-30 09:01 IST   |   Update On 2019-08-30 09:01:00 IST
தனது ரூ.2,800 கோடி மதிப்பிலான சொத்துகளை மகனுக்கும், மகளுக்கும் சமமாக பிரித்து கொடுப்பேன் என அமிதாப் பச்சன் உறுதிபட கூறியுள்ளார்.
இந்தி திரையுலக சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுக்கு, மகன் அபிஷேக் பச்சன் தவிர சுவேதா என்ற மகளும் உள்ளார். இவர் தொழில் அதிபர் நிகில் நந்தாவை திருமணம் செய்துள்ளார். 76 வயதான அமிதாப் பச்சனுக்கு ரூ.2 ஆயிரத்து 800 கோடி சொத்துகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டு உள்ளது. இந்த சொத்துகளை மகனுக்கும், மகளுக்கும் சமமாக பிரித்து கொடுப்பதாக அமிதாப் பச்சன் விருப்பம் தெரிவித்து உள்ளார். 

அமிதாப் பச்சன் நிகழ்ச்சி ஒன்றை நடத்தி வருகிறார். அதில் தனது விருப்பத்தை வெளிப்படுத்திய அவர், தனது சொத்துகளுக்கு மகன் அபிஷேக் மட்டும் உரிமை கோர முடியாது என்று கூறினார். மேலும் மகன் மற்றும் மகள் இருவருக்கும் சமமாக சொத்துகளை பிரித்து கொடுப்பேன் என்றும் தெரிவித்தார். ஏற்கனவே ஒரு தடவை தனது வலைத்தள பக்கத்தில், ‘நான் இறக்கும்போது, எனது சொத்துகளை மகன், மகளுக்கு சமமாக விட்டு செல்வேன்’ என்று கூறியிருந்தார்.



பாலின சமத்துவத்தை பற்றி அடிக்கடி பேசி வரும் அமிதாப்பச்சன் தனது மகள் மீதான அன்பை அவ்வப்போது வெளிப்படுத்தி வருகிறார். 2015-ம் ஆண்டு பிரதமர் மோடி தொடங்கி வைத்த ‘பேடி பச்சாவ், பேடி படாவ்’ (பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கல்வி அளிப்போம்) என்ற பிரசார இயக்கத்தையும் அமிதாப் பச்சன் ஆதரித்தார். மேலும் பெண் குழந்தைகள் நலனுக்கான ஐ.நா.சபை தூதராகவும் அவர் செயல்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News