சினிமா
விஷாலிடம் கால்ஷீட் வாங்கி தருவதாக பல லட்சம் மோசடி - இயக்குனர் மீது தயாரிப்பாளர் புகார்
விஷாலிடம் கால்ஷீட் வாங்கி தருவதாக பல லட்சம் மோசடி செய்ததாக இயக்குனர் வி.சி.வடிவுடையான் மீது தயாரிப்பாளர் புகார் கூறியுள்ளார்.
சினிமா தயாரிப்பாளரான நரேஸ் கோத்தாரி. விருகம்பாக்கம் போலீசில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் கூறி இருப்பதாவது:-
நடிகர் விஷாலிடம் கால்ஷீட் வாங்கி இருப்பதாக கூறி இயக்குனர் வி.சி.வடிவுடையான் என்னை அணுகினார். விஷால் நடிக்கும் படத்தை ரூ.7 கோடி செலவில் எடுக்க இருப்பதாக கூறிய அவர் இந்த படத்தை நீங்கள் தயாரியுங்கள் என்று தெரிவித்தார். இதனை நம்பி அவரிடம் 3 தவணைகளாக ரூ.47 லட்சம் பணம் கொடுத்தேன்.
விஷாலிடம் கால்ஷீட் வாங்கி வைத்திருப்பது போன்ற ஆவணத்தையும் வடிவுடையானிடம் காட்டினார். அது போலியானது என்பது பின்னர் தான் தெரிந்தது. நான் கொடுத்த பணத்தையும் அவர் திருப்பி கொடுக்க வில்லை. எனவே உரிய நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனைத்தொடர்ந்து வி.சி.வடிவுடையான் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.