சினிமா
உண்மையை பேசினால் சிலருக்கு பிரச்சினை - பிரியா வாரியர்
ஒரு அடார் லவ் படத்தின் மூலம் மிகவும் பிரபலமான பிரியா வாரியர், உண்மையை பேசினால் சிலருக்கு பிரச்சினை என்று கூறியிருக்கிறார். #PriyaVarrier
ஓமர் லுலு இயக்கத்தில் ரோஷன், பிரியா வாரியர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘ஒரு அடார் லவ்’. இந்திய திரையுலகில் மிக முக்கியமான நடிகர்கள் அனைவருமே பிரியா வாரியரின் கண் சிமிட்டலுக்கு ரசிகர்களானார்கள். இதனால் மலையாளம், தமிழ், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் காதலர் தினத்தன்று வெளியானது. ஆனால் மிக மோசமான விமர்சனங்களை பெற்று, படுதோல்வியை சந்தித்தது.
இதனை தொடர்ந்து படக்குழுவினர் ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டி வருகின்றனர். முதலில் தனக்குத்தான் முக்கியத்துவம் இருந்தது என்றும், பிரியா வாரியரின் வீடியோ பிரபலமானதால் அவருக்கு முக்கியத்துவம் கொடுத்து கதையை மாற்றிவிட்டனர் என்று நூரின் ஷெரீப் தெரிவித்தார்.
அதன்பின் இயக்குநர் ஓமர் லுலு அளித்துள்ள தொலைக்காட்சி பேட்டியில், ’அந்தப் பாடல் மிகப்பெரிய ஹிட் ஆனவுடன் தயாரிப்பாளர் பிரியா வாரியரை பிரதானமாக வைத்து படத்தை எடுக்க சொன்னார். இதனால் கதை மாறியது’ என்றார். இந்த விஷயம் குறித்து பிரியா வாரியர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார். அதில், ’நான் உண்மையை பேச ஆரம்பித்தால் சிலருக்குப் பிரச்சினை வரும். ஏன் அவர்களைப் போல இருக்க வேண்டும்? நான் அமைதியாக இருக்கிறேன். ஏனென்றால் என்ன ஆனாலும் கர்மா பார்த்துக் கொள்ளும். அந்த நாள் வெகு தொலைவில் இல்லை” என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், தற்போது இந்த இன்ஸ்டாகிராம் பதிவு நீக்கப்பட்டுவிட்டது.