சினிமா

திருமணம் செய்ய வற்புறுத்தல் - காதலன் மீது நடிகை நிலானி புகார்

Published On 2018-09-16 11:58 GMT   |   Update On 2018-09-16 11:58 GMT
காதலன் திருமணம் செய்ய வற்புறுத்துவதாக தொலைக்காட்சி நடிகை நிலானி காவல் நிலையத்தில் அவர் மீது புகார் அளித்துள்ளார். #Nilani
தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருபவர் நடிகை நிலானி. தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம் தீவிரமாக நடைபெற்ற போது போலீஸ் சீருடையில் தோன்றி போலீசுக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. முதலில் போலீஸ் பெண் அதிகாரி ஒருவர் தான் போலீசுக்கு எதிராக பேசியதாக கூறப்பட்டது. பின்னர்தான் அவர் டி.வி. நடிகை என்பது தெரிய வந்தது. வடபழனி போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பின்னர் நிலானி ஜாமீனில் வெளியே வந்தார். தொலைக்காட்சி தொடர்களில் அவர் மீண்டும் நடித்து வருகிறார்.

நிலானி, காந்தி லலித்குமார் என்ற வாலிபருடன் பழகி வந்தார். கடந்த 3 ஆண்டுகளாக இருவருக்கும் நெருங்கிய தொடர்பு இருந்தது. திருமணம் செய்து கொள்வது தொடர்பாக அவர்களுக்கு இடையே கருத்துவேறுபாடு இருந்து வந்தது.



இந்த நிலையில் மயிலாப்பூர் முண்டகண்ணி அம்மன் கோவில் தெருவில் உள்ள ஒரு வீட்டில் நடைபெற்ற தொலைக்காட்சி தொடர் படப்பிடிப்பில் நிலானி பங்கேற்று இருந்தார். அப்போது அங்கு வந்த காதலன் காந்தி லலித்குமார் நிலானியுடன் தகராறில் ஈடுபட்டார். அவரை அவதூறாகவும் பேசியுள்ளார். இதனால் படப்பிடிப்பு தளத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி நிலானி மயிலாப்பூர் போலீசில் புகார் செய்தார். அதில் காந்தி லலித்குமாரும், நானும் நண்பர்களாக பழகி வந்தோம். தற்போது என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி அவர் தொந்தரவு செய்து வருகிறார். இது எனக்கு பிடிக்கவில்லை.

இந்த நிலையில் படப்பிடிப்பு தளத்திற்கு வந்து அவர் என்னிடம் தகராறில் ஈடுபட்டு அசிங்கமாக பேசினார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளார். இதுபற்றி மயிலாப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News