சினிமா

பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து அளித்த நயன்தாரா

Published On 2016-11-18 17:04 IST   |   Update On 2016-11-18 17:04:00 IST
நயன்தாரா தனது பிறந்தநாளில் அவரது ரசிகர்களுக்கு இரட்டை விருந்து அளித்துள்ளார். அது என்னவென்பதை கீழே பார்ப்போம்...
தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர் சமீபத்தில் நடித்த படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டானது. மேலும் பல படங்களில் நடித்து வருகிறார். இதுதவிர பல நடிகர்களும் நயன்தாராவுடன் இணைந்து நடிக்க விருப்பம் தெரிவித்து வருகின்றனர். பல தயாரிப்பாளர்களும் நயன்தாராவை வைத்து படம் தயாரிக்க ஆர்வம் காண்பிக்கின்றனர்.

லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் நயன்தாராவிற்கு இன்று பிறந்தநாள். இந்நாளை முன்னிட்டு நயன்தாராவிற்கு ரசிகர்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இந்நிலையில், இவர் அடுத்ததாக நடிக்க இருக்கும் படத்தின் தலைப்பை அறிவித்திருக்கிறார்கள்.

‘அறம்’ என்று தலைப்பு வைக்கப்பட்டு இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரையும் வெளியிட்டிருக்கிறார்கள். இது நயன்தாராவின் 55வது படமாகும். கோபி நயினார் இயக்கும் இப்படத்திற்கு ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்து வருகிறார். இப்படம் அடுத்த வருடம் வெளியாக உள்ளது.

இந்நிலையில், ‘உன்னைப்போல் ஒருவன்’, ‘பில்லா - 2’ ஆகிய படங்களை இயக்கிய சக்ரி டோலட்டி இயக்கும் புதிய படத்திலும் நயன்தாரா நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும், தலைப்பையும் படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர்.

இப்படத்திற்கு ‘கொலையுதிர் காலம்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். ராபி பாம்கார்ட்னர் ஒளிப்பதிவு செய்கிறார். பூஜா எண்டர்டெயின்மென்ட் பிலிம்ஸ் நிறுவனம் மற்றும் ஒய்.எஸ்.ஆர். பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறது.

நயன்தாரா பிறந்தநாளில் அவருடைய ரசிகர்களுக்கு உண்மையிலேயே இது இரட்டை விருந்துதான். 

Similar News