கன்னி - சனிப்பெயர்ச்சி பலன்கள்

சனிப்பெயர்ச்சி (2023) ராசிபலன்கள், பரிகாரங்கள்

Published On 2023-12-19 05:27 GMT   |   Update On 2023-12-19 05:30 GMT

ஆறில் வருகிறது சனி! அனைத்திலும் வெற்றி இனி!

சனியின் வக்ர காலம்!

19.6.2024 முதல் 4.11.2024 வரை மற்றும் 2.7.2025 முதல் 18.11.2025 வரை என்று இரண்டு முறை சனி வக்ரம் பெறுகின்றார். உங்கள் ராசிக்கு 5, 6 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனி. எனவே தொழிலில் ஏற்றங்களும், நல்ல மாற்றங்களும் வந்து சேரும். பிள்ளைகள் வழியில் சில பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். விரயங்கள் தவிர்க்க முடியாததாக இருக்கும். உத்தியோகத்தில் சகப் பணியாளர்களால் தொல்லை அதிகரிக்கும். பூர்வீக சொத்துத் தகராறுகள் மீண்டும் வந்து தலை தூக்கலாம். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர்.

கன்னி ராசி நேயர்களே!

இதுவரை உங்கள் ராசிக்கு 5-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த சனி பகவான், 20.12.2023 அன்று 6-ம் இடத்தில் அடியெடுத்து வைக்கின்றார். எதிர்ப்பு, வியாதி, கடன் ஆகியவற்றைக் குறிப்பது ஆறாமிடமாகும். உங்கள் ராசிக்கு 5, 6 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனி. பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு அதிபதியான சனி பகவான் தன் சொந்த வீடான கும்பத்தில் சஞ்சரிப்பது யோகம் தான். பொருளாதார நிலை திருப்தி தரும். பிள்ளைகளால் பெருமை சேரும். முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைக்கும் நேரமிது. எதிரிகளின் பலம் குறையும்!

டிசம்பர் 20-ந் தேதி முதல் உங்கள் ராசிக்கு 6-ம் இடத்தில் சனி பகவான் சஞ்சரிக்கப் போகின்றார். இதன் விளைவாக தொழில் மற்றும் உத்தியோகத்தில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறுவதில் இருந்த தடைகள் அகலும். தொழிலில் ஏற்பட்ட இழப்புகளை ஈடுசெய்யப் புதிய வாய்ப்புகள் வந்து அலைமோதும். உடல்நலனில் சிறுசிறு தொல்லைகள் வந்தாலும் பெரியளவில் பாதிப்புகள் ஏற்படாது. அரசு வேலைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு நல்ல தகவல் கிடைக்கும். இடமாற்றம் செய்து வந்தவர்கள் மீண்டும் பழைய இடத்திற்கே செல்லும் வாய்ப்பு உண்டு.

சனியின் பார்வை பலன்கள்!

உங்கள் ராசிக்கு 6-ம் இடத்தில் சஞ்சரிக்கும் சனியின் பார்வை 3, 8, 12 ஆகிய இடங்களில் பதிகின்றது. இதன் விளைவாக சகோதர வர்க்கத்தினருடன் ஒற்றுமை பலப்படும். வழக்குகள் சாதகமாக முடியும். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். உடன்பிறந்தவர்களின் இல்லங்களில் நடைபெறும் சுபநிகழ்ச்சிகளை முன்னின்று நடத்தி வைப்பீர்கள். உத்தியோகத்தில் சகப் பணியாளர்களின் ஒத்துழைப்பால் முன்னேற்றம் காண்பீர்கள்.

சனியின் பார்வை 8-ம் இடத்தில் பதிவதால் சிறுசிறு ஆரோக்கியத் தொல்லைகள் வந்து அலைமோதும். பங்குதாரர்களின் விரோதத்தால் இதுவரை மூடிக்கிடந்த தொழில் இப்பொழுது திறக்கப்படும். தொழில் ரீதியாக வாங்கிய கடன்களை பைசல் செய்ய விடிவு காலம் பிறக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு 'வெளிநாடு செல்ல வாய்ப்பு வரவில்லையே' என்ற ஏக்கம் இப்பொழுது மாறும்.

சனியின் பார்வை 12-ம் இடத்தில் பதிவதால் திடீர், திடீரென பயணங்கள் ஏற்படும். வாடகை வாகனத்தில் உலா வந்த நீங்கள் இனி சொந்த வாகனம் வைத்துக் கொள்ள வாய்ப்புகள் கைகூடிவரும். வீடு மாற்றம், இட மாற்றம் எதிர்பாராத விதத்தில் வரலாம். வாடகை வீட்டில் வசிப்பவர்கள் சொந்த வீட்டில் குடியேறும் வாய்ப்பு கிட்டும்.

சனியின் பாதசாரப் பலன்கள்!

செவ்வாய் சாரத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது (20.12.2023 முதல் 21.2.2024 வரை) இக்காலத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. செவ்வாய் உங்கள் ராசிக்கு 3, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர். முன்னேற்றத்தில் சிறுசிறு குறுக்கீடுகள் வரலாம். உடன்பிறப்புகள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வது அரிது. வழக்குகள் இழுபறி நிலையில் இருக்கும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களால் சில பிரச்சினைகள் உருவாகலாம். எதிர்பாராத விரயம் உண்டு. சொத்துக்கள் வாங்கும் பொழுது பத்திரப் பதிவில் கவனம் தேவை.

ராகு சாரத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது (22.2.2024 முதல் 14.3.2025 வரை)

பெற்றோர் வழியில் இருந்த பிரச்சினைகள் அகலும். தொழிலில் எதிர்பார்த்ததைக் காட்டிலும் கூடுதல் லாபம் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். வெளிநாட்டு வணிகம் ஆதாயம் தரும். பங்குச் சந்தையில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு பலன் அதிகம் கிடைக்கும். உத்தியோகத்தில் பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் பணியில் சேர வாய்ப்பு உண்டு. பூர்வீக சொத்துக்களை பிரித்துக்கொள்வதில் இருந்த பிரச்சினை அகலும். பணிபுரியும் இடத்தில் தடைப்பட்ட பதவி உயர்வு தானாக வந்து சேரும்.

குரு சாரத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது (15.3.2025 முதல் 6.3.2026 வரை)

வரவு செலவுகளில் சரள நிலை உருவாகும். உற்றார், உறவினர்கள் உங்கள் முன்னேற்றத்தைக் கண்டு ஆச்சரியப்படுவர். என்றைக்கோ வாங்கிப்போட்ட சொத்து இப்பொழுது பல மடங்கு உயர்ந்து லாபத்தைத் தரும். திருமணத் தடை அகலும். பிள்ளைகளின் வேலை வாய்ப்பு சம்பந்தமாக எடுத்த முயற்சி வெற்றி தரும். பணிபுரியும் இடத்தில் உயர்அதிகாரிகள் உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் வழங்குவர். வீடு வாங்கும் யோகம் உண்டு.

குருப்பெயர்ச்சிக் காலம்!

சனிப்பெயர்ச்சி காலத்தில் இரண்டு முறை குருப்பெயர்ச்சி நிகழ்கின்றது. அது மட்டுமல்லாமல் வக்ர காலத்தில் கடக ராசிக்கு குரு செல்கின்றார். ரிஷபத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது அதன் பார்வை உங்கள் ராசியில் பதிவதால் உடல் நலம் சீராகும். உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள். பொருளாதார நிலை திருப்தி தரும். தொழில், வியாபாரம் தொடர்பாக எடுத்த முயற்சிகளில் வெற்றி உண்டு. எதையும் துணிந்து செய்து பாராட்டுப் பெறுவீர்கள்.

மிதுனத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, தொழில் மாற்றம், உத்தியோக மாற்றம் உண்டு. நீண்ட நாட்களாக தடைப்பட்டு வந்த பதவி உயர்வு தானாகக் கிடைக்கும். கடை திறப்புவிழா, கட்டிடத் திறப்புவிழா போன்றவற்றில் கவனம் செலுத்துவீர்கள். உங்கள் முன்னேற்றத்திற்கு பெற்றோர் உதவிகரமாக இருப்பர். தொழில் தொடர்பாக புதிய ஒப்பந்தங்கள் வரலாம்.

கடகத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது குரு பகவான் உச்சம் பெறுவதால் இக்காலம் ஒரு பொற்காலமாக அமையும். இனிய சம்பவங்கள் ஏராளமாக நடைபெறும்.

ராகு- கேது பெயர்ச்சிக் காலம்!

26.4.2025-ல் கும்ப ராசியில் ராகுவும், சிம்ம ராசியில் கேதுவும் சஞ்சரிக்கப் போகிறார்கள். விரய கேதுவும், 6-ல் ராகுவும் இருப்பதால் ஏற்ற இறக்கமான வாழ்க்கை அமையும். உத்தியோக மாற்றம், தொழில் மாற்றம் அடிக்கடி நிகழும். நண்பர்கள் பகைவர்கள் ஆவர். பகைவர்கள் நண்பர்களாக மாறுவர். நிலையான வருமானம் கிடைக்கவும், நிம்மதி காணவும் யோகபலம் பெற்ற நாளில் சர்ப்ப சாந்திப் பரிகாரங்களை செய்து கொள்வது நல்லது. ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்.

வெற்றி பெற வைக்கும் வழிபாடு!

சனிக்கிழமை தோறும் விநாயகப் பெருமான் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். சிறப்பு வழிபாடாக சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகிலுள்ள நேமம் ஜெயங்கொண்ட சோழீஸ்வரர் சவுந்தர நாயகி அம்மனை வழிபட்டு பயமின்றி வாழ வழிவகுத்துக் கொள்ளுங்கள்.

Similar News