ரிஷபம் - ஆண்டு பலன் - 2024
null

புத்தாண்டு ராசிபலன்கள்-2024

Published On 2023-12-29 09:36 GMT   |   Update On 2023-12-29 11:36 GMT

வசீகரமான ரிஷப ராசியினரே

இந்த 2024 ஆங்கிலப் புத்தாண்டில் வளமும் நலமும் பெற நல்வாழ்த்துக்கள். திருப்பு முனையான வருடம். இந்த ஆண்டில் வருட கிரகங்களின் சஞ்சாரம் ரிஷப ராசிக்கு மிகச்சாதகமாக உள்ளது. வருமானத் தடை அகன்று நிலையான முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்தில் அமைதியும் மகிழ்சியும் நீடிக்கும். குலதெய்வ அருள் கிடைக்கும். சொந்தத் தொழில் செய்பவர்கள் அதிக முனைப்புடன் விடாமுயற்சியுடன் செயல்பட்டால் பெரும் லாபம் கிட்டும். உத்தியோகஸ்தர்கள் ஊர் விட்டு ஊர் மாற நேரும். பகைவர்களால் ஏற்பட்ட தொல்லைகள் அகலும். ஆக மொத்தத்தில் இந்த வருடம் திண்டாட்டம் மாறி கொண்டாட்டம் உலாவும்.

குருவின் சஞ்சார பலன்கள்

ஏப்ரல் 21, 2023 வரை விரய ஸ்தானத்தில் நிற்கும் குருபகவானால் சுப விரயங்கள், சுப நிகழ்வுகள் மிகுதியாகும். ஏற்றுமதி, இறக்குமதி வணிகர்களுக்கு புதிய ஆர்டர்கள் கிடைக்கும். புதிய வெளிநாட்டு வேலை, தொழில் வாய்ப்புகள் கிடைக்கும். வருமானத்தை அதிகரிக்கும் சொத்துகள் சேரும். ஏப்ரலுக்குப் பிறகு ஓராண்டு காலம் விரைய ஸ்தானத்தில் பயணம் செய்த குரு ஜென்ம குருவாக பயணம் செய்யப்போகிறார். உங்கள் ராசிக்கு ஐந்தாமிடமான பூர்வ புண்ணிய ஸ்தானம், ஏழாமிடமான களத்திர ஸ்தானம், ஒன்பதாமிடமான பாக்கிய ஸ்தானத்தை பார்வையிடுகிறார்.

முக்கியமான இடங்களுக்கு குருவின் பார்வை விழுவது சிறப்பான அம்சமாகும். கூட்டுத்தொழில்கள் சிறப்படையும், பூர்வீக சொத்துக்கள் மூலம் வருமானம் அதிகரிக்கும். பிள்ளைகள் வழியில் நன்மைகள் பல நடக்கும். கணவன், மனைவிக்குள் அன்பும் பாசமும் அதிகரிக்கும். பணவரவு, வருமானம் கூடும். வெளிநாடு செல்லும் யோகம் வருகிறது. குழந்தை இல்லாதவர்களுக்கு ஆண் குழந்தை பிறக்கும். இந்த கால கட்டத்தில் கல்வி நிறுவனங்கள், தர்ம ஸ்தாபனங்கள், வழிபாட்டு ஸ்தலங்களுக்கு உதவி செய்தால் பாக்கிய பலன்கள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல மாற்றம் ஏற்படும்.

சனியின் சஞ்சார பலன்கள்

ஆண்டு முழுவதும் தொழில் ஸ்தான அதிபதி சனி பகவான் ஆட்சி பலம் பெறுகிறார். 12-ம் இடமான அயன சயன ஸ்தானம், 4-ம் இடமான சுக ஸ்தானம் 7-ம் இடமான களத்திர ஸ்தானத்தை பார்வையிடுகிறார். தொழில் தொடர்பான அனைத்து முயற்சிகளும் வெற்றிமேல் வெற்றி கிடைக்கும். வியாபாரத்தில் நிலவி வந்த எதிர்ப்புகள் விலகும்.மனதில் நிறைவும் நெகிழ்ச்சியும் உண்டாகும். ஒரு சிலருக்கு தந்தையின் தொழிலை எடுத்து நடத்த வேண்டிய சூழ்நிலை உண்டாகும். பிள்ளைகளால் ஏற்பட்ட தொல்லைகள் குறையும். அவர்களின் முன்னேற்றத்திற்கு சுப செலவுகள் செய்யலாம். சிலர் இன்சூரன்ஸ் பாலிசி எடுப்பீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு மக்கள் ஆதரவால் நிலையான அதிர்ஷ்டம் கிடைக்கும். நல்லார் உறவும், நண்பர்கள் ஆதரவும் உறவினர்கள், ஒத்துழைப்பும் அமோகமாக அமையும். வாடகை வீட்டில் வசித்தவர்கள் சொந்த வீட்டில் குடியேறுவார்கள். சிலர் பழைய சொத்துக்களை விற்று புதிய சொத்து வாங்குவார்கள். கூட்டுத் தொழிலில் பலன் உண்டு.மறுமணம் கைகூடும். விரய ஸ்தானத்தை சனி பார்ப்பதால்பண விசயத்தில் யாரையும் நம்பக்க கூடாது. சனிக்கிழமை முன்னோர்களை வழிபட அனைத்தும் நற்பலன்களும் அதிகாரிக்கும்.

ராகு கேதுவின் சஞ்சார பலன்கள்

லாபஸ்தான ராகுவும் பஞ்சம ஸ்தான கேதுவால் வேதனைகளும் சோதனைகளும், சாதனைகளாக மாறும். உழைப்பின் மேல் ஆர்வம் குறைந்து அதிர்ஷ்டத்தின் நோக்கி பயணிக்கும் எண்ணம் மேலோங்கும். தந்தையின் ஆலோசனைகளால் பயன் உண்டு. பங்குச்சந்தையில் புதிய முதலீடுகள் செய்து முன்னேற்றப் பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். பிரிந்த தம்பதிகள் கூடி மகிழ்வார்கள்.

திருமணத் தடை அகலும். அரசு சார்ந்த துறைகளால் ஆதாயம் உண்டு. அயல்நாட்டு குடியுரிமைக்கு முயன்றவர்களின் விருப்பம் நிறைவேறும். பூர்வீகச் சொத்தை பிரிப்பதில் சர்ச்சைகள் விலகும். லாப ஸ்தான பலத்தால் தடைபட்ட வீடு கட்டும் பணி துரிதப்படுத்தப்படும். புதிய சொத்துக்களின் பத்திரப் பதிவு நடக்கும். வழக்குகளில் வெற்றி உறுதி.ஆரோக்கியம் சீராகும். பயணங்கள் மிகுதியாகும்.

கிருத்திகை 2,3,4

புதிய தொழில் முயற்சிக்கு உகந்த நேரம். உத்தியோகத்தில் நல்ல பெயர் கிடைக்கும். மனைவி மூலம் ஸ்திர சொத்துக்களின் சேர்க்கை உண்டாகும். சிலர் தான் வாடகைக்கு வசிக்கும் குடியிருப்பை விலைக்கு வாங்குவார்கள்.பிரிந்த தம்பதிகள் சேர்ந்து வாழத் துவங்குவார்கள். சிலருக்கு மறுமண யோகம் ஏற்படும். அரசியல், ஆன்மீகம், கலை என அனைத்து துறை திறமைசாலிகளும் பிரபலமடைவார்கள்.

கண், காது, மூக்கு தொடர்பான உபாதைகள் வைத்தியத்தில் சீராகும். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். பழைய கடன்களை அடைத்து ஆறுதல் அடைவீர்கள்.திருமணம், குழந்தை பேறு, கல்விச் செலவு, வீடு கட்டும் செலவு, கோவில் பிரார்த்தனை போன்ற சுப செலவு உண்டாகும்.வீண் செலவுகளை குறைத்தால் மன அமைதி கூடும்.மாணவ, மாணவிகளுக்கு படிப்பில் ஆர்வமும், அக்கறையும் ஏற்படும்.மாமனாரால் சிறு சிறு இன்னல்கள் தோன்றி மறையும். கோ பூஜை செய்யவும்.

ரோகிணி

குடும்பத்தில் நிம்மதி கூடும் .தன யோகம் சிறப்பாக அமையும்.உத்தியோகத்தில் நிலவிய சங்கடங்கள் விலகும். வேலை இல்லாதவர்களுக்கு திறமைக்கேற்ற வேலை கிடைக்கும்.தொழிலில் உண்டான நெருக்கடிகள் நீங்கும். சிலர் வியாபாரத்தை விரிவு செய்வார்கள். வருமானத்தில் ஏற்பட்ட தடைகள் விலகி வாழ்க்கைக்கு, ஜீவனத்திற்கு தேவையான, வருவாய் கிடைக்கத் துவங்கும். கடன்களை அடைத்து நிம்மதி அடைவீர்கள்.

தாய், தந்தை பொருள் உதவி செய்து வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள். கடந்த காலத்தில் நடந்த கருத்து வேறுபாடு மற்றும் மனக் கவலைகள் மறைந்து தம்பதிகள் மகிழ்ச்சியாக இல்லறம் நடத்துவார்கள். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.மேற்படிப்பிற்கான முயற்சி கை கூடும்.வீடு, வாசல் யோகம் உண்டாகும். சமுதாய அங்கீகாரம் அதிகரிக்கும்.ஸ்ரீ ரங்கநாதரை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.

மிருகசீரிஷம் 1,2

அதிர்ஷ்டமும், யோகமும் கூடி வரும் .வாரிசு இல்லாதவர்களுக்கு புத்திரம் உருவாகும். பிள்ளைகளின் படிப்பு, வேலை, சம்பாத்தியம், திருமணம், புத்திர பாக்கியம் போன்ற பலன்கள் சந்தோஷம் தரும்.மேல் அதிகாரிகளின் அன்பும், ஆதரவும், பாராட்டும் கிடைக்கும்.கடன் வாங்கி, அட்வான்ஸ் வாங்கி போனஸில் கடனை கழித்து வாழ்க்கையை ஓட்டிய நடுத்தர வர்க்கத்தினரின் வருமானம் உயரும். கைவிட்டுப் போகும் நிலையில் இருந்த பூர்வீகச் சொத்தின் தீர்ப்பு சாதகமாகும்.

கணவன், மனைவி ஒற்றுமையால் மகிழ்ச்சி கூடும்.ஆன்ம பலம் பெருகி ஆரோக்கியத் தொல்லை குறையும். தாய், தந்தையரின் விருப்பங்களையும், அவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை நிறைவேற்றுவீர்கள். காரியத்தடை, மன சஞ்சலம் குறைய மாலை 4.30 முதல் 6 மணிக்குள் சரபேஸ்வரரை வழிபட தன் நிறைவும் நிலையான நிம்மதியும் உண்டாகும்.

திருமணம்

திருமணத் தடை அகலும். இந்த ராகு கேது பெயர்ச்சி ரிஷப ராசிக்கு காதல், கலப்பு திருமணத்தை அதிகம் நடத்தி தருவார். ஏப்ரல் 2024-ல் ராசிக்குள் வரும் குருபகவான் காதல் திருமணத்திற்கு பெற்றோர் சம்மதத்தை பெற்றுத்தருவார்.

பெண்கள்

பெண்கள் வேலை பார்க்கும் இடத்திற்கு விசுவாசமாகவும், நன்றியுடனும் இருப்பீர்கள். தொழில் முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். உங்கள் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு நீங்கள் காணும் கனவுகள் பலிதமாகும். கணவர் மற்றும் பிள்ளைகளால் மகிழ்ச்சியும் நிம்மதியும் நிரம்பும். தங்கம், வெள்ளி, அழகு, ஆடம்பரப் பொருட்கள் அதிகம் சேரும். வீட்டில் சுப நிகழ்வுகள் நடக்கும். பழைய கடனை அடைத்து புதிய வாழ்க்கைக்கு அஸ்திவாரம் அமைப்பீர்கள். மாதவிடாய் கோளாறு சீராகும்.

வியாபாரிகள்

ரிஷப ராசிக்கு 10-ல் நிற்கும் சனியும் லாபத்தில் நிற்கும் ராகுவும், மிகச்சாதகமாக உள்ளனர். ஏப்ரலுக்குப் பிறகு குருவும் சுப பலன் வழங்க உள்ளார். புதிய ஒப்பந்தங்கள் கைகூடி வரும்.தொழில் விரிவாக்க கடனும் கிடைக்கும். நல்ல வருமானம் வரும். கடனும் அடைபடும்.நல்ல தொழில் முன்னேற்றம் ஏற்படும் காலத்தில் வரும் லாபத்தை மறு முதலீடாக்குவது உங்கள் கையில் தான் இருக்கிறது.

உத்தியோகஸ்தர்கள்

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றம் ஏற்படும். வேலைக்காக பலர் குடும்பத்தை பிரிந்து வெளியூர், வெளிநாடு செல்ல நேரும். சுய ஜாதக பலனை சரி பார்க்காமல் தேவையில்லாமல் வேலை மாற்றம் செய்யாமல் இருப்பது நலம். அரசு அலுவலகத்தில் வேலை பார்பவர்கள் இடைக்கால பதவி நீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் வேலையில் வந்து சேர உத்தரவு வரும்.

அரசியல்வாதிகள்

ஜாதகருக்கு அரசியலில் வெற்றி ஏற்படும். பெற்ற பதவிக்கான வேலையை திறம்பட செய்து மக்கள் மனதில் நிரந்தரமாக இடம் பிடிப்பீர்கள். எப்பொழுது பதவி பறிபோகுமோ என்ற பரிதவிப்புடன் வாழ்ந்தவர்களுக்கு இப்பொழுது ராகு பகவான் உருட்டும் பகடை காயில் 2024-ல் நடைபெறும் பாராளுமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று உங்கள் கட்சிக்கு பெருமை சேர்ப்பீர்கள்.அரச பதவியில் இருப்பவர்கள் சிவ வழிபாடு செய்தால் சுப பலன்கள் இரட்டிப்பாகும்.

பரிகாரம்

வெற்றிலை, பாக்குடன் கல்கண்டு வைத்து வெள்ளி கிழமை இஷ்ட, குலதெய்வம், மகாலட்சுமி வழிபாடு செய்தால் பொன் பொருள் சேர்க்கை ஏற்படும்.

Similar News