ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்
null

ராகுகேது பெயர்ச்சி பலன்கள் - 2023

Published On 2022-05-20 09:50 GMT   |   Update On 2023-04-10 07:03 GMT

12.4.2022 முதல் 30.10.2023 வரை

பனிரென்டில் ராகு/ ஆறில் கேது

அழகான ரிஷப ராசியினரே ராகு கேதுக்கள் ராசிக்கு 12, 6ம் இடத்திலும் குரு பகவான் 11, 12ம் இடத்திலும் சனிபகவான் 9,10ம் இடத்தில் சஞ்சரிக்கிறார்கள்.

12ம்மிட ராகுவின் பலன்கள்:இதுவரை ராசியில் சஞ்சாரம் செய்து மன உளைச்சலை அதிகரித்த ராகு 12ம் மிடமான விரய ஸ்தானத்திற்குச் சென்றதால் மன நிம்மதி அதிகரிக்கும். ராகு அந்நிய தேசத்தைக் குறிக்கும் கிரகம் என்பதால் சிலர் பிழைப்பிற்காக வெளிநாட்டை நோக்கிச் செல்வார்கள். ரிஷபம் கால புருஷ குடும்ப ஸ்தானம் என்பதால் தலை மறைவாக வாழ்ந்தவர்கள் வீடு திரும்புவார்கள். ராகு தான் நின்ற இடத்தின் பலனை பிரமாண்டப்படுத்துவார் என்பதால் விரயம் சற்று மிகைப்படுத்தலாக இருக்கும். வீடு கட்டப் போட்ட பட்ஜெட் எகிறும். கல்யாண செலவு திட்டமிட்டதை விட இரட்டிப்பாகும்.இப்படி தொட்டதெல்லாம் செலவில் கொண்டு போய் நிறுத்திவிடும்.

அதனால் குழந்தைகளின் படிப்பு, சுப விசேஷங்கள் என வாழ்வின் அனைத்து தேவைகளையும் ராகு நிறைவேற்றி வைப்பார். சிலருக்கு இடது கண்ணிற்கு அறுவை சிகிச்சை செய்ய நேரும்.

12.4.2022 முதல் 14.6.2022 வரை ராகுவின் கிருத்திகை நட்சத்திர சஞ்சார பலன்கள்:ரிஷபத்திற்கு 4ம் அதிபதியான சூரியனின் கிருத்திகை நட்சத்திரத்தில் ராகு சஞ்சரிக்கும் காலத்தில் தடைபட்ட வாடகை வருமானம் வரத் துவங்கும். சிலருக்கு வீடு கட்ட அரசின் மானியம் கிடைக்கும். இதுவரை வாகனம் இல்லாதவர்களுக்கு வாகன பிராப்தம் உண்டாகும். வீட்டிற்கு தேவையான அழகு ஆடம்பரப் பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். தாயின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். தாயுடன் புரிதல் உண்டாகும். சிலருக்கு நாய், பூனை, மீன், பறவைகள் என உயிரின வளர்ப்பில் ஆர்வம் அதிகரிக்கும். வெகு சிலர் தங்கள் பெயருக்கு அவப் பெயரை தேடிக் கொள்வார்கள்.

15.6.2022 முதல் 20.2.2023 வரை ராகுவின் பரணி நட்சத்திர சஞ்சார பலன்கள்:சுக்ரனின் நட்சத்திரமான பரணி ரிஷபத்திற்கு ராசியதிபதி மற்றும் ஆறாம் அதிபதி. ராசி அதிபதி மற்றும் ஆறாம் அதிபதியும் சுக்ரன் என்பதால் உங்களுக்கு நடக்கும் நல்லது, கெட்டது இரண்டிற்கும் நீங்களே காரணமாக இருப்பீர்கள். சிலர் அதிக சம்பளத்திற்கு ஆசைப்பட்டு பார்த்துக் கொண்டு இருந்த உத்தியோகத்தை விட்டு விட்டு வேறு வேலைக்கு செல்வார்கள். சிலருக்கு பார்த்த வேலைக்கு உடனே ஊதியம் வராமல் தடை தாமதமாகும். சிலருக்கு தகாத பெண்களின் நட்பு உருவாகும். கேட்ட, கேட்காத இடத்திலும் கடன் கிடைக்கும்.

தாய்மானுடன் சிறிய மன பேதம் உண்டாகும். ராசி அதிபதியின் நட்சத்திரத்தில் ராகு சஞ்சரிப்பதால் சிலருக்கு கண் திருஷ்டி, உடல் அலர்ஜி, செரிமானக் கோளாறு, காய்சல், தலைவலி போன்ற சிறு சிறு உடல் உபாதைகள் தோன்றும். இந்த காலகட்டத்தில் ஏதேனும் போட்டி பந்தயங்களில் கலந்து கொண்டால் வெற்றி நிச்சயம். தொழில் எதிரிகள் உங்களை கண்டு விலகுவார்கள்.

21.2.2023 முதல் 30.10.2023 வரை ராகுவின் அசுவினி நட்சத்திர சஞ்சார பலன்கள்:அசுவினி கேதுவின் நட்சத்திரம். கோட்சாரத்தில் 6ம் இடமான ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் கேது சஞ்சரிக்கிறார்.கேது தான் நின்ற பாவக பலனை சுருக்குவார் என்பதால் எதிரி, கடன், வட்டி தொல்லையிலிருந்து விடுவிப்பார். நாள்பட்ட வியாதிகள் மறையும். வாடகை வீட்டு தொல்லை, அண்டை அயலார் சச்சரவு முற்றிலும் நீங்கும். உங்கள் வாழ்வில் நடந்த கெட்ட சம்பவங்களின் தாக்கம் குறையும்.

தாய், தந்தை வழி உறவுகளிடம் அறியாமல் செய்த தவறுக்காக மன்னிப்பு கேட்டு குடும்பத்தில் இணைவீர்கள். பகைமை மறந்து உறவுகள் ஆறுதலாக இருப்பார்கள். செய்யாத குற்றத்திற்காக சிறை தண்டனை அனுபவித்தவர்கள் நன்னடத்தையால் விடுபடுவார்கள். இழுத்தடித்த, நிலுவையில் இருந்த வம்பு வழக்குகள் தீரும்.

6ம்மிட கேதுவின் பலன்கள்:ராசிக்கு 6ம் இடமான துலாத்தில் சஞ்சரிக்கும் கோட்சார ருண ,ரோக, சத்ரு ஸ்தானத்தை இயக்கப் போகிறார். அதன் பலனாக எதிரி தொல்லை முற்றிலும் அகன்று விடும்.

கடந்த ஒன்றறை ஆண்டுகளாக ரிஷப ராசியினர் பட்ட இன்னல்களுக்கு கேது முற்றுப் புள்ளி வைப்பார். விவாகரத்து வழக்கை சாதகமாக்குவர்.

வாழவும் முடியாமல் மீளவும் முடியாமல் தவித்த நிலை மறையும். இதுவரை விற்காமல் இருந்த அசையாச் சொத்துக்கள் விற்று விடும். பூர்வீக சொத்து தொடர்பாக பங்காளிகளிடம் இருந்த கருத்து வேறுபாடு நீங்கி உங்களுக்கு கிடைக்க வேண்டிய பங்கு சட்ட ரீதியாக கிடைக்கும். வழக்குகள் உங்களுக்கு சாதகமாகும்.

" கடனா " அப்படின்னா என்ன? என்று கேட்கும் அளவிற்கு பணம் கூரையை பிய்த்துக் கொண்டு கொட்டும்.ஜாமீன் பொறுப்பால், வராக்கடனால் இழந்த பணம் வசூலாகும். திருடு போன பொருட்கள் கிடைக்கும். அடமான நகை, வீடு, நிலம் மீளும். இது நாள் வரை பட்ட கடன், அவமானதால் பாவம், புண்ணியம் பற்றிய புரிதல் உண்டாகும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் எதிர்பாராத பணவரவு உங்களை திணற வைக்கும். வர வேண்டிய பணம்வரும்.

12.4.2022 முதல் 17.10.2022 வரையான கேதுவின் விசாகம் நட்சத்திர சஞ்சார பலன்கள்:ரிஷப ராசிக்கு 8,11ம் அதிபதியான குருவின் நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்யும் கேது பகவான் திடீர் அதிர்ஷ்டத்தையும் விபரீத ராஜ யோகத்தையும் வழங்குவார். ஜனன கால ஜாதகத்தில் குரு, கேது தசை புத்தி நடப்பவர்களுக்கு சமுதாய அங்கீகாரத்தை தரக்கூடிய தொழில் தொடர்பான புதிய எண்ணங்கள் மற்றும் திட்டங்கள் தோன்றும். மிகக் குறுகிய காலத்தில் பணக்காரர் ஆகும் தொழில் சிந்தனைகள் அதிகரிக்கும். பொருளை பன் மடங்காக பெருக்கும் குறுக்கு வழியில் நாட்டம் மிகும்.அதற்காக புதிய பங்கு தாரர்களை தேடும் முயற்சியில் ஈடுபடுவீர்கள்.

பல புதிய தொழில் வாய்ப்புகள், தொழில் முதலீட்டாளர்கள், ஏஜென்சி நிறுவனங்களின் ஒப்பந்தங்கள் தேடி வரும். சிலர் இலவச ஆபர் கொடுப்பது, முதலீட்டை இரட்டிப்பாக்கி தருவது , ஆன் லைன் வணிகம், ஷேர் மார்க்கட்,சதுரங்க வேட்டை படத்தில் மண் பாம்பை வைத்து பணம் சம்பாதிப்பது போன்ற அவயோக தொழிலவை தேர்வு செய்து சட்ட சிக்கலில் மாட்ட நேரும். மற்ற தசை நடப்பவர்களின் தொழில் முயற்சிகள் சுப பலனை தரும்.

18.10.2022 முதல் 26.6.2023 வரையான கேதுவின் சுவாதி நட்சத்திர சஞ்சார பலன்கள்:ராசிக்கு 12ல் விரய ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்யும் கோட்சார ராகுவின் நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் கேது சேவை மனப்பான்மையை மிகைப்படுத்துவார். ஆன்மீக தொண்டு நிறுவனங்கள், சங்கங்களில் இணைந்து சேவை செய்வீர்கள். வயதான சிலர் அல்லது மத்திம வயதினர் கோவில்களில் உலவாரப் பணிகள் செய்து முக்திக்கு வித்திடுவார்கள்.

சிலர் முழு நேர அரசியல்வாதியாக மாறி மக்களுக்கு சேவை செய்வார்கள். நீண்ட நாட்களாக படுக்கையில் கிடந்தவர்கள் எழுந்து நடமாடுவார்கள். மரணப் படுக்கையில் இருப்பவர்களுக்கு கூட நோய் தாக்கம் குறையும். முன்னோர்களின் பரம்பரை வியாதியான சுகர், பிரஷர் போன்றவற்றிற்கு மாற்று மருத்துவம் நல்ல பலன் தரும். கை, கால் மூட்டு வலி குறையும்.

நீண்டதூர பிரயாணத்தை தரும் ஆன்மீக சுற்றுலா தலங்களான கேதார்நாத், பத்திரிநாத், கைலாஷ், மானசரோவர் போன்ற தலங்களுக்கு செல்லும் வாய்ப்பு ஏற்படும்.நெடுந்தூர வெளிநாட்டு பயணம் , இன்பச் சுற்றுலா சென்று வருவீர்கள்.

27.6.2023 முதல் 30.10.2023 வரை கேதுவின் சித்திரை நட்சத்திர சஞ்சார பலன்கள்:ரிஷபத்திற்கு 7, 12ம் அதிபதியான செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் கேது பகவான் திருமணத் தடையைத் தருவார். அல்லது தவறான கலப்பு திருமணத்தை ஏற்படுத்துவார் அல்லது களத்திர விரோதத்தை ஏற்படுத்துவார். சில தம்பதிகள் கருத்து வேறுபாடு காரணமாகவோ, தொழில் நிமித்தம் காரணமாகவோ பிரிந்து வாழலாம். தொழில் கூட்டாளிகளிடம் கருத்து வேறுபாடு அல்லது பிரியும் நிலை ஏற்படும். புதிய தொழில் ஒப்பந்தம், பங்குச் சந்தை முதலீட்டை தவிர்க்க வேண்டும். விரையங்கள் அதி கரிக்கும். குடும்ப வாழ்வில் நாட்டக்குறைவு உருவாகும்.

வேற்று மொழி பேசுபவர்களுடன் அந்நிய தேசத்தில் குடிபுகும் நிலை ஏற்படும். சிலர் மதம் மாறுவார்கள்.

இந்த ராகு/கேது பெயர்ச்சி கடந்த கால இழப்புகளை ஈடு செய்யும் விதத்தில் இருக்கும். கடன் வாங்குவதை தவித்து நம்பிக்கையோடு உழைக்க நல்லதே நடக்கும்.

பரிகாரம்

சங்கடஹர சதுர்த்தி அன்று விநாயகருக்கு அருகம்புல், தேங்காய் மாலை சாற்றி வழிபாடு செய்வதால் சகல விதமான தடைகள் சங்கடங்கள் நீங்கும். விநாயகர் அகவல் பராயணம் செய்து வர கஷ்டங்கள் விலகும். வெள்ளிக்கிழமை சக்ரத் தாழ்வாருக்கு துளசி அர்ச்சனை செய்து வழிபட கடன் தீரும்.

'பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Similar News