மேஷம் - சனிப்பெயர்ச்சி பலன்கள்

சனிப்பெயர்ச்சி (2023) ராசிபலன்கள், பரிகாரங்கள்

Published On 2023-12-19 05:11 GMT   |   Update On 2023-12-19 05:14 GMT

பதினோராம் இடத்தில் சனி! பணவரவு தான் இனி!

சனியின் வக்ர காலம்!

19.6.2024 முதல் 4.11.2024 வரை, 2.7.2025 முதல் 18.11.2025 வரை இரண்டு முறை சனி வக்ரம் பெறுகின்றார். இக்காலத்தில் தொழில் மற்றும் லாப ஸ்தானத்திற்குஅதிபதி வக்ரம் பெறுவதால் உத்தியோகம், தொழிலில் குறுக்கீடுகள் அதிகரிக்கும்.

ஒருவரையும் நம்பி செயல்பட முடியாது. தான் உண்டு, தன் வேலை உண்டு என்று இருக்க வேண்டிய நேரமிது. வீண்பழிஏற்படாமல் பார்த்துக் கொள்ளவும். விரயங்கள் கொஞ்சம் கூடுதலாகத்தான் இருக்கும். தைரியமும், தன்னம்பிக்கையும் இருப்பதோடு தெய்வ நம்பிக்கையும் இருந்தால் அவை கைகொடுத்து உதவும். பிறருக்குப் பொறுப்பு சொல்வதால் பிரச்சினைகள் ஏற்படும் நேரமிது.

மேஷ ராசி நேயர்களே!

இதுவரை உங்கள் ராசிக்கு 10-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த சனி பகவான் 20.12.2023 அன்று 11-ம் இடமான லாப ஸ்தானத்தில் அடியெடுத்து வைக்கின்றார். உங்கள் ராசிக்கு 10, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனி. தொழில் மற்றும் லாப ஸ்தானத்திற்கு அதிபதியான சனி பகவான், இப்பொழுது லாப ஸ்தானத்திலேயே சஞ்சரிக்கப்போவது யோகம்தான். தொட்டது துலங்கும். தொழில் வளம் சிறக்கும். எதிர்பார்த்ததைக் காட்டிலும் கூடுதல் லாபம் வரும்.

லாபச் சனியின் ஆதிக்கம்!

டிசம்பர் 20-ந் தேதி முதல், உங்கள் ராசிக்கு 11-ம் இடத்தில் சனி பகவான் சஞ்சரிக்கப் போகின்றார். அந்த இடம் லாப ஸ்தானம் என்று சொல்லப்படுவதால் இதுவரை எவ்வளவு முயற்சி செய்தும் முடிவடையாத தொழில் தொடர்புகள், உத்தியோக முன்னேற்றங்கள் இப்பொழுது முடிவடைந்து சந்தோஷத்தை வழங்கும். கூட்டுத் தொழிலில் இருந்து விலகி சுய தொழில் செய்ய எடுத்த முயற்சி கைகூடும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்கும்.

சனியின் பார்வைப் பலன்கள்!

உங்கள் ராசிக்கு 11-ம் இடத்தில் சஞ்சரிக்கும் சனி பகவான், உங்கள் ராசியைப் பார்ப்பதோடு 5, 8 ஆகிய இடங்களையும் பார்க்கப்போகின்றார். உடல்நலம், குடும்பம், புகழ், ஆரோக்கியம், பூர்வ புண்ணியம், பிள்ளைகள், பூர்வீக சொத்துக்கள், ஆயுள் விருத்தி, ஆரோக்கியம் போன்றவற்றை எல்லாம் அறிந்து கொள்ளும் விதத்தில் சனி பகவான் பார்வை பதிவதால் அதற்குரிய பலன்கள் உங்களுக்கு வந்து சேரும். ஆரோக்கியத் தொல்லை வரத்தான் செய்யும். சுபவிரயங்கள் அதிகரிக்கும். செல்வாக்கு மேலோங்கும். இடமாற்றம் இனிமை தரும் விதத்தில் அமையும்.

சனியின் பார்வை 5-ல் பதிவதால் பிள்ளைகளின் எதிர்கால முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி உண்டு. பெண் பிள்ளைகளின் சுபச் சடங்குகள் மற்றும் பெற்றோரின் மணி விழா, முத்து விழா, பவள விழா போன்ற விழாக்கள் நடைபெறுவதற்கான வாய்ப்பு உண்டு. பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். சனியின் பார்வை அஷ்டம ஸ்தானத்தில் பதிவதால் இழப்புகளை ஈடுசெய்ய புதிய வாய்ப்புகள் கைகூடிவரும்.

இடமாற்றம், ஊர் மாற்றம் எதிர்பாராத விதத்தில் வந்து மனதை மகிழ்விக்கும். தொழிலில் புதிய பங்குதாரர்களை சேர்த்துக்கொள்ள முன்வருவீர்கள். வீண் விரயங்கள் ஏற்படாமல் இருக்க சுபவிரயங்களை மேற்கொள்வது நல்லது. குடும்பத்தில் சலசலப்புகள் ஏற்படாமல் கலகலப்பாக இருக்க விட்டுக் கொடுத்துச் செல்வது உத்தமம்.

சனியின் பாதசாரப் பலன்கள்

செவ்வாய் சாரத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது (20.12.2023 முதல் 21.2.2024 வரை) உங்கள் ராசிநாதன் காலில் சனி உலா வருவதால் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்தும் சூழ்நிலை ஏற்படும். சகோதரர்களால் சில இடையூறுகள் ஏற்பட்டு அகலும். தொழில் பங்குதாரர்கள் விலகிக் கொள்வதாகச் சொல்லிப் பிரச்சினைகளை உருவாக்கலாம்.

`உத்தியோகத்தில் சுதந்திரமாகச் செயல்பட முடியவில்லையே' என்று கவலைப்படுவீர்கள். தைரியகாரகன் செவ்வாய் உங்கள் ராசிநாதனாக இருப்பதால் எதையும் எதிர்கொள்ளும் ஆற்றல் உங்களுக்கு உண்டு. ஆயினும் இதுபோன்ற காலங்களில் மனக்கலக்கம் கொஞ்சம் அதிகரிக்கத்தான் செய்யும்.

ராகு சாரத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது (22.2.2024 முதல் 14.3.2025 வரை)

அதிர்ஷ்ட வாய்ப்புகள் அரங்கேறும். திட்டமிட்ட பணிகளை சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். திடீர் முன்னேற்றம் வந்து சேரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தற்காலிகப் பணி, நிரந்தரப் பணியாக மாறும். வர்த்தகம் சார்ந்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வரன்கள் வாசல் தேடி வரும். விலகிச் சென்ற சொந்தங்கள் விரும்பி வந்திணைவர்.

குரு சாரத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது (15.3.2025 முதல் 6.3.2026 வரை)

வருமானம் திருப்திகரமாக இருக்கும். வாழ்க்கைப் பாதையில் நல்ல மாற்றங்கள் வந்து சேரும். வாங்கிய கடனைக் கொடுத்து மகிழ்வீர்கள். கொடுத்த கடன்கள் தானாக வந்து சேரும். நிலம், பூமி வாங்குவதில் முதலீடு செய்வீர்கள். எதிரிகள் விலகுவர். நட்பால் நல்ல காரியங்கள் நடைபெறும். விருப்ப ஓய்வில் வெளிவந்தவர்கள் சுயதொழில் தொடங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள்.

குருப்பெயர்ச்சிக் காலம்

சனிப்பெயர்ச்சிக் காலத்தில் இரண்டு முறை குருப்பெயர்ச்சி நிகழ்கின்றது. அதுமட்டுமல்லாமல் வக்ர காலத்தில் கடக ராசிக்கும் குரு செல்கின்றார். ரிஷபத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது விரயத்திற்கேற்ற லாபம் வந்து சேரும். வீடு மாற்றம், இடமாற்றம் உருவாகலாம்.

தொழிலில் அதிக கவனம் செலுத்தவேண்டிய நேரமிது. உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். இரண்டில் குரு வரும்பொழுது திடீரெனச் செல்வம் வரும் என்பார்கள். ஆனால் விரயாதிபதியாக குரு விளங்குவதால் வரவைக் காட்டிலும் செலவு கூடுதலாகவே இருக்கும்.

மிதுனத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். சகோதர வர்க்கத்தினர்களுடன் இருந்த பகைமை நிலை மாறும். அதே நேரத்தில் தொழிலில் அதிக முதலீடு செய்து அகலக்கால் வைக்க வேண்டாம்.

கடகத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது தாய் வழி ஆதரவு கிடைக்கும். ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும். அதிக உழைப்பும், அதற்கேற்ற வருமானமும் உண்டு. வெளிநாட்டில் உள்ள நல்ல நிறுவனங்களில் இருந்து ஒரு சிலருக்கு வாய்ப்புகள் வரலாம்.

ராகு - கேது பெயர்ச்சிக் காலம்

26.4.2025-ல் கும்ப ராசியில் ராகுவும், சிம்ம ராசியில் கேதுவும் சஞ்சரிக்கப் போகிறார்கள். இதன் விளைவாக லாப ஸ்தானம் புனிதமடைவதால் வரவு திருப்திகரமாக இருக்கும். வியாபாரத்தில் ஏற்பட்ட சரிவை ஈடுகட்ட எடுத்த முயற்சி கைகூடும். பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு கேது வருவதால் ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். முன்னோர்கள் கட்டி சிதிலமடைந்த கோவில்களைப் புதுப்பித்து மகிழ்ச்சி காண்பீர்கள்.

வெற்றி பெற வைக்கும் வழிபாடு

சனிக்கிழமை தோறும் விரதம்இருந்து சனி பகவானை வழிபடுவதோடு, அருகம்புல் மாலை சூட்டி ஆனைமுகப்பெருமானையும் வழிபடுவது நல்லது. சிறப்பு வழிபாடாக சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் உள்ள கற்பக விநாயகர் வழிபாடு காரிய வெற்றிக்கு கைகொடுக்கும்.

Similar News