என் மலர்


கெவி
மருத்துவ வசதி மற்றும் சாலை வசதி இல்லாத கிராமங்களில் வாழும் மக்களின் வலியை சொல்லும் திரைப்படம்.
கதைக்களம்
மலை கிராமத்தில் வாழ்ந்து வரும் நாயகன் ஆதவன், தேர்தல் நேரத்தில் மட்டும் தங்களை சந்திக்க வரும் ஆட்சியாளர்களை கேள்வி கேட்கிறார். மேலும், அவர்களுடன் வந்த வனத்துறை காவலர்களுடன் மோதலில் ஈடுபடுகிறார். இதனால், அவர் மீது கோபமடையும் வனத்துறை அதிகாரி அவரை பழிதீர்க்க நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் மனைவி ஷீலாவை தனியாக விட்டு, மலையில் இருந்து கீழே இறங்கும் போது, வனத்துறை அதிகாரியும், காவலர்களும் சேர்ந்து ஆதவனை கொலை செய்ய முயற்சிக்கிறார்கள். மறுபக்கம் அவரது மனைவிக்கு பிரசவ வலி ஏற்பட, போக்குவரத்து வசதியில்லாத அந்த கிராமத்தில் இருந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்குள் தாய் மற்றும் குழந்தைக்கு ஆபத்து ஏற்படும் நிலை உருவாகிறது.
இறுதியில் நாயகன் ஆதவன், வனத்துறை அதிகாரிகளிடம் இருந்து தப்பித்தாரா? மனைவி ஷீலா மற்றும் குழந்தைக்கு என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
கதையின் நாயகனாக நடித்திருக்கும் ஆதவன், மலையன் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறார். வனத்துறை காவலர்களிடம் சிக்கிக்கொண்டு உயிருக்கு போராடும் காட்சியில் கவனிக்க வைத்து இருக்கிறார். நிறைமாத கர்ப்பிணியாக நடித்திருக்கும் ஷீலா, எதார்த்தமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார். பிரசவ வலியால் தவிக்கும் காட்சியில் நெகிழ வைத்து இருக்கிறார்.
பயிற்சி மருத்துவராக நடித்திருக்கும் ஜாக்குலின், வனத்துறை அதிகாரியாக நடித்திருக்கும் சார்லஸ் வினோத், முதன்மை மருத்துவராக நடித்திருக்கும் காயத்ரி, கடுக்கா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விவேக் மோகன், தர்மதுரை ஜீவா, போஸ்ட் மேனாக நடித்திருக்கும் உமர் ஃபரூக் என அனைவரும் கொடுத்த வேலையை செய்து இருக்கிறார்கள்.
இயக்கம்
மருத்துவ வசதி மற்றும் சாலை வசதி இல்லாத கிராமங்களில் வாழும் மக்களின் வலியை சொல்லி இருக்கிறார் இயக்குனர் தமிழ் தயாளன். மக்களை தேர்தல் நேரத்தில் மட்டுமே சந்திக்கும் ஆட்சியாளர்கள் பற்றி தைரியமாக சொல்லியிருக்கிறார் இயக்குனர்.
ஒளிப்பதிவு
ஒளிப்பதிவாளர் ஜெகன் ஜெயசூர்யாவின் கேமரா, மலை கிராமங்களை நேர்த்தியாக படம்பிடித்து இருக்கிறது.
இசை
இசையமைப்பாளர் பாலசுப்ரமணியனின் இசை படத்திற்கு பலம் சேர்த்து இருக்கிறது.
தயாரிப்பு
Manikannan, Perumal G, Jagan jaya surya ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.









