என் மலர்


எட்டும் வரை எட்டு
தன்னுடைய முன்னேற்றத்திற்கு குடும்பமே தடையாக இருக்கும் நிலையில், அதை உடைத்து முன்னேறும் பெண்ணின் கதை.
கதைக்களம்
மிகவும் பின் தங்கிய கிராமத்தைச் சேர்ந்த நாயகி பிரத்யங்கிரா ரோஸ், விளையாட்டில் சாதிக்க வேண்டும் என்று லட்சியத்துடன் இருக்கிறார். அதற்கு ஏற்றவாறு ஓட்டப்பந்தயத்தில் அதீத திறன் கொண்ட அவர், உலக அரங்கில் சாதிக்க வேண்டும் என்ற கனவோடு பயணிக்கிறார்.
ஆனால், அவரது தந்தை நரேன், பெண்கள் என்றாலே சமைப்பதற்கும், வீட்டை பராமரிப்பதற்கும் தான், என்ற பழைய சித்தாந்தப்படி வாழ்வதால், நாயகியின் லட்சியத்திற்கு தடையாக இருக்கிறார். தந்தையின் தடையை மீறி எப்படியாவது தான் நினைத்தது போல் விளையாட்டில் சாதிக்க வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபடும் நாயகியின் மீது கொலை குற்றம் சுமத்தப்படுகிறது.
இறுதியில் கொலைப்பழியில் இருந்து மீண்டாரா? தனது கனவை சாதித்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
கதையின் நாயகியாக நடித்திருக்கும் பிரத்யங்கிரா ரோஸ், பலம் வாய்ந்த கதாபாத்திரத்தில் பக்குவமாக நடித்து பாராட்டு பெறுகிறார். தனது லட்சியத்திற்கு வரும் தடைகளை சாமர்த்தியமாக தகர்த்து ஒவ்வொரு படியாக முன்னேற்றம் அடைவதும், கொலை குற்றவாளியாகி தடுமாறும் காட்சிகளிலும் உணர்வுப்பூர்வமாக நடித்து இருக்கிறார்.
நாயகனாக நடித்திருக்கும் நந்தகுமார் கொடுத்த வேலையை செய்திருக்கிறார். நாயகியின் தந்தையாக நடித்திருக்கும் ‘ஆடுகளம்’ நரேன், அனுபவமான நடிப்பை கொடுத்து இருக்கிறார். இவரது நடிப்பு படத்திற்கு கூடுதல் பலம்.
ஆர்த்தி, முத்துக்காளை, வெங்கல் ராவ், கிங்காங், ஜெயகுமார், கிரேன் மனோகர், நாகராஜ சோழன், சுசி, எஸ்.பாஸ்கர், என்.ஆர்.தன்பாலன் ஆகியோரின் நடிப்பு திரைக்கதை ஓட்டத்திற்கு உதவி இருக்கிறது.
இயக்கம்
பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள ஒரு கதையை எடுத்து எழுதி இயக்கி இருக்கிறார் இயக்குனர் வேல்விஸ்வா. பெண்கள் பல துறைகளில் சாதித்தாலும், இன்னும் பல கிராமங்களில் பெண்கள் அடக்குமுறைக்கு ஆளாகும் நிலை இருக்கத்தான் செய்கிறது என்பதை சொல்லி இருக்கிறார். பெண்களின் முன்னேற்றத்திற்கு அவர்களது குடும்பத்தாரே தடையாக இருக்கும் சூழல் இருப்பதை பதிவு செய்திருக்கிறார். திரைக்கதையில் கொஞ்சம் அழுத்தம் இருந்திருந்தால் கூடுதலாக ரசித்து இருக்கலாம்.
இசை
ராஜயோகி இசையில் பாடல்கள் அனைத்தும் சுமார் ரகம். பின்னணி இசை கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.
ஒளிப்பதிவு
வேல் முருகனின் ஒளிப்பதிவு கிராமத்தை இயல்பாக காண்பிக்க முயற்சி செய்து இருக்கிறார்.









