என் மலர்


போகி
பழங்குடி இன மக்களின் வலி மிகுந்த வாழ்க்கையையும், நாட்டில் நடந்த சில உண்மை சம்பவங்களையும் மையமாக கொண்டு உருவாகியுள்ளது.
கதைக்களம்
ரகசிய கேமாராக்கள் மூலம் பெண்களை ஆபாசமாக படம் எடுத்து அதன் மூலம் பணம் சம்பாதிக்கும் மிகப்பெரிய கும்பலை தகுந்த ஆதாரங்களுடன் பிடிக்கும் முயற்சியில் காவல்துறை ஈடுபடுகிறது.
மறுபக்கம் அந்த கும்பலை சேர்ந்தவர்களை தேடிப்பிடித்து நாயகன் நபி நந்தியும், சரத்தும் கொலை செய்கிறார்கள்.
நாயகன் நபி நந்திக்கும் இந்த கும்பலுக்கும் என்ன தொடர்பு ? நபி நந்தியின் பின்னணி என்ன? அரசு அதிகாரிகள் அவர்கள் தரப்பு என்ன செய்தனர்? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
நாயகனாக நடித்து இருக்கும் நபி நந்தி, முதல் படம் போல் தெரியாத அளவிற்கு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். தன் தங்கைக்கு ஏற்பட்ட கொடூரத்திற்கு பழி தீர்க்கும் காட்சிகளில் கவனிக்க செய்திருக்கிறார்.
நாயகனின் தங்கையாக நடித்திருக்கும் சுவாசிகா ஒரு பழங்குடி இன பெண்களை கண் முன் நிறுத்துகிறார். பாலியல் தொடர்பான குற்றங்களில் பாதிக்கப்பட்டு சிதைக்கப்படும் பெண்களின் உடல் ரீதியான மற்றும் மன போராட்டங்களை தனது நடிப்பு மூலம் வெளிப்படுத்தி பார்வையாளர்களை கலங்க வைத்துவிடுகிறார்.
காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் வேல ராமமூர்த்தி, வில்லன் கதாபாத்திரத்தில், வித்தியாசமான லுக்கில் நடித்திருக்கும் நான் கடவுள் ராஜேந்திரன், ஒரு காட்சியில் வந்தாலும் தனது சில்மிஷ நடிப்பால் சிரிக்க வைக்கும் எம்.எஸ்.பாஸ்கர், மூத்த நடிகர் சங்கிலி முருகன், ‘பிச்சைக்காரன்’ கார்த்தி உள்ளிட்ட அனைத்து நடிகர்களும் திரைக்கதை ஓட்டத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார்கள்.
இயக்கம்
எழுதி இயக்கியிருக்கும் விஜயசேகரன்.எஸ்- சமூக பிரச்சனையையும், பழங்குடி இன மக்களின் வலி மிகுந்த வாழ்க்கையையும், நாட்டில் நடந்த சில உண்மை சம்பவங்களையும் மையமாக கொண்டு திரைக்கதை எழுதியுள்ளார். படத்தில் இடம் பெற்ற நான் லீனியர் கதை சொல்லல் பார்வையாளர்களின் கவனத்தை சிதறடிக்கிறது. படத்தின் திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்திருக்க வேண்டும்.
ஒளிப்பதிவு
ஒளிப்பதிவாளர் ராஜா சி.சேகர் வெவ்வேறு காலக்கட்டத்தில் நடக்கும் கதையை நேர்த்தியாக காட்சிப்படுத்தியுள்ளார்.
இசை
இசையமைப்பாளர் மரியா மனோகர் இசையில், சினேகனின் வரிகளில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையிலும் குறையில்லை.
தயாரிப்பு
Vi CINEMA GLOBAL NETWORKS & LIKE Presents நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.











