சவுதி அரேபியா இளவரசர் அடுத்த மாதம் இந்தியா வருகிறார்
- இந்தியா-சவுதி அரேபியா இடையே சிறப்பான நல்லுறவு உள்ளது.
- இந்தியாவின் 4-வது பெரிய வர்த்தக கூட்டாளியாக சவுதி அரேபியா உள்ளது.
ரியாத்:
சவுதி அரேபியா இளவரசர் முகமது பின் சல்மான் அடுத்த மாதம் மத்தியில் இந்தியா வரவுள்ளார்.
அடுத்த மாதம் 15, 16-ந்தேதிகளில் ஜி-20 நாடுகள் உச்சி மாநாடு இந்தோனேசியாவில் நடக்கிறது.
ஜி-20 மாநாட்டில் பங்கேற்க செல்லும் சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் வழியில் இந்தியாவுக்கு வருகிறார்.
கடந்த மாதம் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரின் அழைப்பை ஏற்று சவுதி இளவரசர் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சவுதி இளவரசரின் இந்திய பயணத்தின் போது இரு நாடுகள் இடையே எரிசக்தி, பாதுகாப்பு, வர்த்தகம், முதலீடுகள் தொடர்பான ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு உள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமர் மோடியும்-சவுதி இளவரசர் முகமது பின் சல்மானும் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா-சவுதி அரேபியா இடையே சிறப்பான நல்லுறவு உள்ளது. இந்தியாவின் 4-வது பெரிய வர்த்தக கூட்டாளியாக சவுதி அரேபியா உள்ளது. இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் 18 சதவீதம் சவுதியில் இருந்து இறக்குமதி செய்கிறது.
சவுதி அரேபியா இளவரசர், கடைசியாக கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியா வந்திருந்தார். தற்போது உக்ரைன்-ரஷியா போர் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் உள்ள நிலையில் சவுதி அரேபியா இளவரசரின் இந்திய பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.