உலகம்

பாகிஸ்தான் குண்டுவெடிப்பில் பலி 46 ஆக உயர்வு- தலிபான் அமைப்பு பொறுப்பேற்றது

Published On 2023-01-30 15:08 GMT   |   Update On 2023-01-30 15:08 GMT
  • சுமார் 150 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
  • ஆப்கானிஸ்தானில் தலிபான் அமைப்பின் முக்கிய கமாண்டர் கொல்லப்பட்டதற்கு பழிவாங்கும் நடவடிக்கை

பெஷாவர்:

பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் பலத்த பாதுகாப்பு மிக்க பகுதியில் உள்ள மசூதியில் இன்று வெடிகுண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. பிற்பகல் தொழுகையின்போது தற்கொலைப்படை தீவிரவாதி இந்த தாக்குதலை நிகழ்த்தி உள்ளான். இதில் பலர் தூக்கி வீசப்பட்டனர். மசூதியின் ஒரு பகுதி கடுமையாக சேதமடைந்தது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். முதற்கட்டமாக 17 பேர் உயிரிழந்த நிலையில், நேரம் செல்லச் செல்ல உயிரிழப்பு அதிகரித்தது. இரவு நிலவரப்படி பலி எண்ணிக்கை 46 ஆக உயர்ந்தது. சுமார் 150 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் போலீஸ்காரர்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தாக்குதலுக்கு தெஹ்ரீக்-இ-தலிபான் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானில் அந்த அமைப்பின் முக்கிய கமாண்டர் உமர் காலித் கொல்லப்பட்டதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக அவனது சகோதரன் கூறியிருக்கிறான்.

Tags:    

Similar News