தமிழ்நாடு செய்திகள்

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ள பெருக்கு: நீர்வரத்து வினாடிக்கு 43 ஆயிரம் கனஅடியாக நீடிக்கிறது

Published On 2025-09-06 10:25 IST   |   Update On 2025-09-06 10:25:00 IST
  • நடைபாதைக்கு மேலே தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
  • அருவியில் குளிக்க விதிக்கப்பட்ட தடையானது தொடர்ந்து 7-வது நாளாக நீடிக்கிறது குறிப்பிடத்தக்கது.

ஒகேனக்கல்:

தென்மேற்கு பருவமழை காரணமாக கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ண ராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த 2 அணைகளும் முழுமையாக நிரம்பி விட்டன. அணைகளின் பாதுகாப்பு கருதி 2 அணைகளில் இருந்து மொத்தமாக வினாடிக்கு 33 ஆயிரத்து 122 கனஅடி உபரிநீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

இந்த நீர் கர்நாடக, தமிழக எல்லையான பிலிகுண்டுலு வழியாக காவிரி ஆற்றில் கரைபுரண்டு தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் நேற்று காலை ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 32 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. இந்த நீர்வரத்து மேலும் அதிகரித்து வினாடிக்கு 43 ஆயிரம் கன அடியாக வந்தது.

தொடர்ந்து இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 43 ஆயிரம் கனஅடியாக நீடிகிறது. இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்ப்பட்டுள்ளது. ஒகேனக்கல்லில் உள்ள மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. மேலும் நடைபாதைக்கு மேலே தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பதன் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மீண்டும் தடைவிதித்து மாவட்ட கலெக்டர் சதீஷ் உத்தரவிட்டுள்ளார். அருவியில் குளிக்க விதிக்கப்பட்ட தடையானது தொடர்ந்து 7-வது நாளாக நீடிக்கிறது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News