தமிழ்நாடு செய்திகள்

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 14 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

Published On 2025-08-30 09:49 IST   |   Update On 2025-08-30 09:49:00 IST
  • மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
  • காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

தருமபுரி:

கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை 15 நாட்கள் முன்கூட்டியே அதாவது மே மாதத்தின் மத்தியில் தொடங்கி பெய்து வருகிறது. இந்த ஆண்டு நல்ல மழை பெய்வதால் ஏரி, குளங்கள், நீர்நிலைகள், அணைகள் நிரம்பி வழிகின்றன.

கடந்த ஒரு வாரமாக மழை குறைந்திருந்த நிலையில் தற்போது மழை மீண்டும் வெளுத்து வாங்க தொடங்கியுள்ளது.

இதன் காரணமாக அங்குள்ள கிருஷ்ணராஜசாகர் (கே.ஆர்.எஸ்.), கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

பாதுகாப்பு கருதி இந்த இரு அணைகளில் இருந்து தமிழக காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நேற்று 8 ஆயிரம் கனஅடியாக வந்த நீர்வரத்து இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து 14 ஆயிரம் கன அடியாக அதிகரித்து உள்ளது.

இதனால் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் பரிசல் பயணம் செய்து காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர். பின்னர் அவர்கள் மெயின் அருவியில் குளித்து மகிழ்ந்தனர். மீன் சாப்பாடு வாங்கி கொண்டு பூங்காவில் அமர்ந்து சாப்பிட்டனர்.

மேலும் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

இதனால் காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

Tags:    

Similar News