சரியாக செயல்படுத்தாமல் அத்திக்கடவு அவிநாசி திட்டத்தில் எங்களை குறை கூறுவதா?- அமைச்சர் பாய்ச்சல்
- ஒரு ஏரியிலிருந்து மற்றொரு ஏரிக்கு தண்ணீர் செல்வதற்கு குழாய் மூலம் தான் எடுத்துச் செல்ல வேண்டும்.
- பல இடங்களில் மின்சாரத்தை பயன்படுத்தி தண்ணீரை மேல் ஏற்றிக் கொண்டு செல்ல வேண்டும்.
வேலூர்:
அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள.அவரது திருவுருவ சிலைக்கும், அலங்காரம் செய்து வைக்கப்பட்டிருந்த அவரின் திருவுருவ படத்திற்கும் அமைச்சர் துரைமுருகன், கலெக்டர் குமாரவேல் பாண்டியன், ஆகியோர் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
அப்போது அமைச்சர் துரைமுருகன் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
அதிமுக ஆட்சிக்காலத்தில் அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை அவசரப்பட்டு அந்த திட்டத்திற்குரிய எல்லா பணிகளையும் முடிக்காமல் ஏதோ நாங்கள்தான் ஆரம்பித்தோம் என சொல்வதற்காக துவக்கி வைத்து விட்டு போய்விட்டார்கள்.
ஒரு ஏரியிலிருந்து மற்றொரு ஏரிக்கு தண்ணீர் செல்வதற்கு குழாய் மூலம் தான் எடுத்துச் செல்ல வேண்டும்.
பல இடங்களில் மின்சாரத்தை பயன்படுத்தி தண்ணீரை மேல் ஏற்றிக் கொண்டு செல்ல வேண்டும். இதற்குரிய இடங்கள் பல தனியார் நிலங்களில் உள்ளன.
அந்த இடங்களை இன்னும் அரசாங்கம் கையகப்படுத்தவில்லை. அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.
இது போன்ற தொடர்பணிகள் உள்ள நிலையில் இதை அப்படியே விட்டுவிட்டு அத்திக்கடவு அவினாசி திட்டம் திறக்க வேண்டும் என்று சொன்னால் அவர்கள் செய்த அவசரத்தை போல் நாங்களும் அவசரப்பட்டால் ஏன் அவசரப்பட்டீர்கள் என்று கேள்வி வரும்.
செய்கிற பணிகளை முழுமையாக செய்து விட்டு தான் அத்திக்கடவு அவினாசி திட்டம் திறக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.