தமிழ்நாடு

திருப்பூரில் இன்று பின்னலாடை உற்பத்தியாளர்களுடன் மத்திய அமைச்சர்கள் கலந்துரையாடல்

Published On 2022-06-26 09:33 GMT   |   Update On 2022-06-26 09:33 GMT
  • மத்திய அமைச்சர்கள் பியூஷ்கோயல், முருகன் ஆகியோர் கலந்து கொண்டு கலந்துரையாடினர்.
  • பஞ்சு விலையை கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை அமைச்சரிடம் அழுத்தமாக தெரிவிக்கப்பட்டது.

திருப்பூர்:

திருப்பூர் மாவட்டம் ஈட்டிவீரம்பாளையம் நேதாஜி அப்பேரல் பார்க்கில் உள்ள தொழிற்பூங்காவில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை, ஜவுளித் துறை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை, மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் இன்று பார்வையிட்டனர்.

மேலும் அப்பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் தொழிற்சாலை இயங்கும் முறை, நவீன எந்திரங்களின் பயன்பாடு, தொழிலாளர்கள் நலன் குறித்து அமைச்சர்கள் கேட்டறிந்தனர். அப்போது பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., மற்றும் தொழில் துறையினர் பலர் உடனிருந்தனர்.

பின்னர் அங்கு அமைக்கப்பட்டிருந்த பெரிய திரையில் பிரதமரின் மன் கி பாத் நிகழ்ச்சியை பார்வையிட்டனர். இதில் தொழில் துறையினர் மற்றும் பா.ஜ.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து திருமுருகன்பூண்டி பாப்பீஸ் ஓட்டலில் திருப்பூர் பின்னலாடை துறையினருடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் மத்திய அமைச்சர்கள் பியூஷ்கோயல், முருகன் ஆகியோர் கலந்து கொண்டு கலந்துரையாடினர்.

இதில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கழக தலைவர் சக்திவேல் நினைவு பரிசை வழங்கினார். தொடர்ந்து, பின்னலாடை உற்பத்தியாளர்கள் சங்கத்தினர், ஏற்றும தியாளர் சங்கத்தினர், டையிங் அசோசியேஷன் உள்ளிட்ட பல்வேறு சங்கத்தினர் தங்களது கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை மத்திய அமைச்சர் பியூஷ் கோயலிடம் வழங்கினர்.

பஞ்சு விலையை கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை அமைச்சரிடம் அழுத்தமாக தெரிவிக்கப்பட்டது. வரும் சீசன்களில் இந்திய பருத்தி கழகம், அதிக அளவு பஞ்சு கொள்முதல் செய்து இருப்பு வைக்கவேண்டும். சந்தையில் விலை ஏறும்போது, கையிருப்பு பஞ்சை விடுவித்து விலையை சீர்படுத்த வேண்டும்.பின்னலாடை துறை சார்ந்த ஆராய்ச்சி மையத்தை திருப்பூரில் ஏற்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

Tags:    

Similar News