புதுவை பஸ்நிலையம் முன்பு இந்து அமைப்புகள் மறியல்: 20 பெண்கள் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் கைது
- புதுவை பஸ்நிலையம் முன்பு இந்து முன்னணி, இந்து அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள், பா.ஜனதா நிர்வாகிகள் திரண்டனர்.
- இந்து அமைப்பினர் இந்து சமய பாடல்களை பாடிக்கொண்டே பஸ்நிலையம் முன்புறம் தரையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி:
இந்து மதத்தையும், பெண்களையும் இழிவாக பேசிய தி.மு.க. எம்.பி. ராசாவை கண்டித்து, இன்று இந்து முன்னணி, இந்து அமைப்புகள் சார்பில் புதுவையில் முழு அடைப்பு போராட்டம் நடந்தது.
இதையொட்டி புதுவை பஸ்நிலையம் முன்பு இந்து முன்னணி, இந்து அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள், பா.ஜனதா நிர்வாகிகள் திரண்டனர். இந்து முன்னணி அமைப்பாளர் சனில்குமார், பொதுச் செயலாளர் முருகையன், பா.ஜனதா எம்.எல்.ஏ. அசோக்பாபு, நிர்வாகிகள் செல்வம், ரவிச்சந்திரன், வெற்றிச்செல்வம், கோவேந்தன்கோபதி மற்றும் இந்து அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் திரண்டனர்.
ஆண்களும், பெண்களும் காவி உடை, ருத்திராட்ச மாலை அணிந்துகொண்டு கையில் வேல், சூலம் ஆகியவற்றுடன் வந்திருந்தனர். அவர்களை தடுத்து நிறுத்திய சீனியர் போலீஸ் சூப்பிரண்டு தீபிகா, மதம் தொடர்பான கோஷங்களை எழுப்பலாம். ஆனால் மறைந்த தலைவர்களையும், அவர்களின் இயக்கங்களையும் விமர்சித்து கோஷம் எழுப்பக்கூடாது. அதையும் மீறி கோஷம் எழுப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.
இதைத்தொடர்ந்து இந்து அமைப்பினர் இந்து சமய பாடல்களை பாடிக்கொண்டே பஸ்நிலையம் முன்புறம் தரையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். பெண்களை இழிவாக பேசிய தி.மு.க. எம்.பியை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.
இந்து முன்னணி அமைப்பாளர் சனில்குமார் கூறும்போது, இந்து மதத்தையும், பெண்களையும் இழிவாக பேசிய தி.மு.க. எம்.பி. ராசாவை கண்டித்து பந்த் போராட்டம் நடத்தப்பட்டது.
இந்த போராட்டம் முழு வெற்றியை அடைந்துள்ளது. மக்கள், வியாபாரிகள், தாமாகவே முன்வந்து கடைகளை அடைத்து, எதிர்ப்பை தெரிவித்து போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
எம்.பி. ராசா மீது தி.மு.க. உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்து மக்களை இழிவாக பேசியதற்காக தி.மு.க. பொதுமக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். பந்த் போராட்டத்தை முழு வெற்றி பெறச்செய்த அனைத்து தரப்பினருக்கும் இந்து முன்னணி, இந்து அமைப்புகள் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து மறியல் செய்த இந்து முன்னணி, இந்து அமைப்புகளை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட 100-க்கும் மேற்பட்ட நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர்.