ஒகேனக்கல்லில் நீர்வரத்து 4 ஆயிரம் கனஅடியாக நீடிப்பு
- கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்படுவது தொடர்ந்து குறைக்கப்பட்டுள்ளது.
- நீர்வரத்தால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் உள்ள சீனி பால்ஸ், ஐந்தருவி, மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கின்றன.
ஒகேனக்கல்:
தமிழக கர்நாடகா காவிரி எல்லையான பிலிகுண்டுலுவில் நீர்வரத்து அதிகரித்து வினாடிக்கு 4 ஆயிரம் கன அடியாக நீடித்து வருகிறது.
கர்நாடகா அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி ஆற்றின் வழியாக உபரிநீர் வினாடிக்கு 883 கன அடியாக நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
தற்போது கிருஷ்ணராஜசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1195 கன அடியாக உள்ள நிலையில், அணையில் இருந்து 583 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டுள்ளன.
அதேபால கபினி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 243 கன அடியாக உள்ள நிலையில், நீர்வெளியேற்றம் என்பது வினாடிக்கு 300 கன அடியாக உள்ளது.
கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்படுவது தொடர்ந்து குறைக்கப்பட்டுள்ளது. மேலும் காவிரி எல்லைப்பகுதிகளில் உள்ள ஒரு சில இடங்களில் பெய்த மழையால் ஒகேனக்கல்லுக்கு நேற்று வினாடிக்கு 3 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து வினாடிக்கு 4 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. இன்று காலையும் ஒகேனக்கல்லுக்கு அதே அளவில் நீர்வரத்து நீடித்து வருகிறது.
இந்த நீர்வரத்தால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் உள்ள சீனி பால்ஸ், ஐந்தருவி, மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கின்றன.