தமிழ்நாடு

சோதனை என்ற பெயரில் அதிகாரிகள் கடைகளுக்குள் நுழைந்து வணிகர்களை அச்சுறுத்தக்கூடாது- விக்கிரமராஜா வலியுறுத்தல்

Published On 2023-11-01 09:53 GMT   |   Update On 2023-11-01 09:53 GMT
  • வணிகர்களுக்கு பல்வேறு இடர்பாடுகள் ஏற்படுகிறது.
  • ஆன்லைன் வர்த்தகம் என்பது ஏமாற்று வேலை யாகும்.

கிருஷ்ணகிரி:

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா கிருஷ்ணகிரியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

வணிகர்களுக்கு பல்வேறு இடர்பாடுகள் ஏற்படுகிறது. கொரோனா காலத்தில் 2 ஆண்டுகள் வணிகர்கள் பொது மக்களுக்கு எந்த அளவில் உறுதுணையாக இருந்தார்கள் என்பதை அறிவீர்கள். ஆன்லைன் வர்த்தகம் என்பது ஏமாற்று வேலை யாகும். அன்னிய நாட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள் ஒன்றுக்கு 4 இலவசம், 2-க்கு 2 இலவசம் என்று மக்களை ஏமாற்றி வருகிறார்கள்.

பொதுமக்கள் உள்நாட்டு வணிகத்தை பாதுகாக்க முன் வர வேண்டும். ஆன்லைன் வர்த்தகத்தை புறக்கணியுங்கள். தற்போது தீபாவளி பண்டிகை வர உள்ளது. அனைத்து கடைகளுக்கும் சென்று பொது மக்கள் பொருட்கள் வாங்க முன் வர வேண்டும். இந்த நேரத்தில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை என்ற பெயரில், கடைகளுக்குள் நுழைந்து வணிகர்களிடையே அச்சுறுத்த கூடாது.

தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசுகள் வெடிக்கப்படும். இந்த நேரத்தில் பட்டாசு கடைக்காரர்களுக்கு அரசு துறை அதிகாரிகள் அச்சுறுத்தலை தந்து வருகிறார்கள். சில்லறை பட்டாசு விற்பனை கடைகளில் எங்காவது விற்பனை நடந்துள்ளதா? உற்பத்தி செய்யும் இடங்களில் விபத்துக்கள் நடந்திருக்கலாம். எனவே பட்டாசு கடைகளுக்கு அதிகாரிகள் உடனே உரிய அனுமதி வழங்க வேண்டும்.

இது தொடர்பாக நாங்கள் சென்னையில் அதிகாரிகளை சந்தித்துள்ளோம். இதே நிலை நீடித்தால் ஒரிரு நாட்களில் பிரச்சினை தீராவிட்டால் முதலமைச்சரை ஒரிரு நாட்களில் சந்தித்து தமிழ்நாடு முழுவதும் பட்டாசு கடைகளை திறக்க தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வழிவகை செய்யும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

பக்கத்து மாநிலங்களில் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு அனுமதி இல்லை. ஆனால் நமது மாநிலத்தில் அப்படி இல்லை. சாமானிய வணிகர்களை காக்க முதலமைச்சர் முன் வர வேண்டும்.

உள்நாட்டு வணிகர்களை காக்க வேண்டும். அதற்காக வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தொடர்ந்து வலியுறுத்தும். ஜி.எஸ்.டி. அதிகமாக கட்ட கூடிய மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. ஆனால் நமது மாநிலத்திற்கு வரக்கூடிய தொகை குறைவாகும். ஜி.எஸ்.டி.யில் அடிக்கடி மாற்றங்கள் கொண்டு வரப்படுகின்றன.

கவுன்சிலிங் கூட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதில் பாதிக்கப்படுவது வணிகர்கள் தான். வியாபாரிகளை, வணிகர்களை காக்க பிரதமர் முன் வர வேண்டும். பட்டாசு கடைகளை பொது இடத்தில் வைப்பது என்பது சாத்தியமில்லாத ஒன்று. அதற்கான வழிமுறைகள் தற்போது இயலாது. சட்டத்தை உடனடியாக மக்களிடம் கொண்டு வந்தால் தொழில் நடத்த முடியாது. ஆகவே தகுந்த பாதுகாப்புடன் பட்டாசு கடைகளை வைக்க அறிவுறுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News