தமிழ்நாடு

வீட்டில் தூங்கிய தந்தை-மகளை பாம்பு கடித்தது: ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை

Published On 2023-07-26 07:06 GMT   |   Update On 2023-07-26 07:06 GMT
  • நேற்று இரவு பாலாஜி குடும்பத்துடன் குடிசை வீட்டில் தூங்கினார்.
  • பாலாஜி, அவரது மகள் விகிதாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

திருத்தணி:

திருத்தணி அடுத்த வி.சி.ஆர். கண்டிகை கிராமத்தைச் சேர்ந்தவர் பாலாஜி(வயது30). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி ராதா. இவர்களுக்கு 2 மகன்களும், விகிதா(7) என்ற மகளும் உள்ளனர். விகிதா அருகில் உள்ள பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று இரவு பாலாஜி குடும்பத்துடன் குடிசை வீட்டில் தூங்கினார். நள்ளிரவில் வீட்டுக்குள் வந்த பாம்பு ஒன்று பாலாஜியையும், அவரது மகள் விகிதாவையும் கடித்து சென்று விட்டது.

இதில் விஷம் ஏறியதில் அவர்கள் இருவரும் வாயில் நுரை தள்ளிய நிலையில் மயங்கினர். இன்று அதிகாலை ராதா மற்றும் அவரது மகன்கள் எழுந்தபோது பாலாஜியும், விகிதாவும் பாம்பு கடித்ததில் மயங்கிய நிலையில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக அவர்களை மீட்டு திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

அங்கு பாலாஜி, அவரது மகள் விகிதாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களது உடல் நிலை மிகவும் மோசமாக உள்ளது. இதுகுறித்து திருத்தணி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News