செய்திகள்
கோப்பு படம்

மோட்டார் சைக்கிளில் சென்ற போது தான் படித்த கல்லூரியின் பஸ் மோதி மாணவர் பலி

Published On 2020-03-17 16:16 IST   |   Update On 2020-03-17 16:16:00 IST
வில்லியனூர் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற போது தான் படித்த கல்லூரியின் பஸ் மோதி மாணவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:

வில்லியனூர் அருகே கரிக்கலாம்பாக்கம் ஸ்ரீராம் நகரை சேர்ந்தவர் அருள்செல்வம். இவரது மகன் சுதர்சனம் (வயது 21). இவர் அபிஷேகப்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம். 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

சுதர்சனம் கல்லூரி செல்லும் நேரங்களை தவிர, மற்ற நேரங்களில் வில்லியனூரில் உள்ள ஒரு காய்கறி கடையில் பகுதி நேர ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

அதுபோல் இன்று காலை சுதர்சனம் காய்கறி கடையில் வேலை பார்த்து விட்டு கல்லூரிக்கு செல்ல கடையில் இருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்.

வில்லியனூர் ஆச்சாரியாபுரத்தில் உள்ள தனியார் பெட்ரோல் பங்க் அருகே சென்ற போது முன்னால் தன்னுடன் படித்து வரும் மாணவ- மாணவிகளை ஏற்றிக் கொண்டு கல்லூரி வாகனம் சென்றது.

அவர்களை பார்த்ததும் சுதர்சனம் உற்சாகம் அடைந்து மோட்டார் சைக்கிளில் அவர்களை பின்தொடர்ந்து கைகாட்டியபடி சென்று கொண்டிருந்தார்.

அப்போது திடீரென எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது கல்லூரி வாகனம் உரசியது. இதில், மோட்டார் சைக்கிளில் இருந்து தடுமாறி விழுந்த சுதர்சனம் மீது கல்லூரி வாகனத்தின் பின் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் உடல் நசுங்கி சுதர்சனம் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்து போனார்.

இதனை பார்த்ததும் பஸ்சில் வந்த சுதர்சனத்துடன் படிக்கும் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்து தங்களது கண் எதிரே கல்லூரி தோழர் விபத்தில் பலியானதை கண்டு கதறி அழுதனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் வில்லியனூர் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மாணவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர் காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தான் படிக்கும் கல்லூரி வாகனத்திலேயே மாணவர் சுதர்சனம் மோதி பலியான சம்பவம் அக்கல்லூரி மாணவர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கிடையே டிரைவரின் கவனக்குறைவால் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறி மாணவரின் உறவினர்கள் கல்லூரிக்கு சென்று முறையிட்டனர். இந்த சம்பவத்துக்கு கல்லூரி நிர்வாகமே பொறுப்பு ஏற்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். ஆனால், கல்லூரி நிர்வாகம் தகுந்த பதிலை அளிக்கவில்லை.

இதையடுத்து உறவினர்கள் மற்றும் மாணவர்கள் ஆத்திரம் அடைந்து கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து தவளக்குப்பம் 4 முனை சந்திப்பில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் தவளக்குப்பம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் இளங்கோ மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதுபற்றி முறையாக புகார் தெரிவித்தால் நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர். இதனை ஏற்று மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இந்த திடீர் சாலை மறியல் போராட்டம் காரணமாக அப்பகுதியில் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Similar News