செய்திகள்

இந்திய ‘ஏ’ அணியின் பன்சால், ஷ்ரேயாஸ் அய்யர், விஜய் சங்கர் சதம் அடித்து அசத்தல்

Published On 2017-02-06 10:45 GMT   |   Update On 2017-02-06 10:45 GMT
வங்காள தேசம் ‘ஏ’ அணிக்கெதிராக இந்திய ‘ஏ’ அணியின் பன்சால், ஸ்ரேயாஸ் அய்யர், விஜய் சங்கர் சதம் அடித்து அசத்தினார்கள்.
இந்தியா ‘ஏ’ - வங்காள தேசம் ‘ஏ’ அணிகளுக்கு இடையிலான இரண்டு நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டம் நேற்று ஐதராபாத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற வங்காள தேசம் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி அந்த அணி முதலில் களம் இறங்கி 8 விக்கெட் இழப்பிற்கு 224 ரன்கள் எடுத்திருக்கும்போது முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. சவுமியா சர்கார், மிஷ்பிகுர் ரஹிம் ஆகியோர் அரைசதம் அடித்தனர்.

பின்னர் இந்தியா ‘ஏ’ அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் இந்தியா ‘ஏ’ அணி 1 விக்கெட் இழப்பிற்கு 91 ரன்கள் எடுத்திருந்தது. பன்சால் 40 ரன்னுடனும், ஷ்ரேயாஸ் அய்யர் 29 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. பன்சால், அய்யர் இருவரும் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். பன்சால் 103 ரன்களும், அய்யர் 100 ரன்களும் சேர்த்து ரிட்டையர்டு ஹர்ட் மூலம் வெளியேறினார்கள்.

அதன்பின் வந்த ரிஷப் பந்த் 19 ரன்னிலும், இஷான் கிஷான் 11 ரன்னிலும், ஹர்திக் பாண்டியா 7 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். 8-வது வீரராக களம் இறங்கிய விஜய் சங்கர் அவுட்டாகாமல் 103 ரன்கள் சேர்க்க இந்தியா ஏ அணி 90 ஓவரில் 461 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது.

237 ரன்களுடன் பின்தங்கிய நிலையில் வங்காள தேசம் 2-வது இன்னிங்சை தொடங்கியுள்ளது.

Similar News