பீகாரில் இன்று ரெயில் என்ஜினில் பயங்கர தீ விபத்து- பயணிகள் உயிர் தப்பினர்
- பீகார் மாநிலம் ரெக்சலில் இருந்து நர்காட்டி காகஞ்ச் என்ற இடத்துக்கு இன்று காலை பயணிகள் ரெயில் சென்றது.
- சிறிது தூரம் சென்றதும் ரெயில் என்ஜினில் இருந்து திடீரென புகை வந்தது.
பாட்னா:
பீகார் மாநிலம் ரெக்சலில் இருந்து நர்காட்டி காகஞ்ச் என்ற இடத்துக்கு இன்று காலை பயணிகள் ரெயில் சென்றது. இதில் ஏராளமான பயணிகள் பயணம் செய்தனர் பெல்லா ரெயில் நிலையத்தில் நின்று விட்டு மீண்டும் புறப்பட்டு சென்றது.
சிறிது தூரம் சென்றதும் ரெயில் என்ஜினில் இருந்து திடீரென புகை வந்தது. இதை பார்த்த டிரைவர் உடனடியாக ரெயிலை நிறுத்தினார். அதற்குள் என்ஜின் தீ பிடித்து எரிய தொடங்கியது. இது பற்றி உடனடியாக தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனே அவர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதனால் தீ மற்ற பெட்டிகளுக்கு பரவாமல் தடுக்கப்பட்டது. தீ விபத்தில் என்ஜின் சேதம் அடைந்தது.
என்ஜினில் தீ விபத்து ஏற்பட்டதும் டிரைவர் உடனடியாக ரெயிலை நிறுத்தியதால் பயணம் செய்த அனைவரும் அவசரஅவசரமாக கீழே இறங்கி உயிர் தப்பினார்கள். தீ மற்ற பெட்டிகளுக்கு பரவாததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. தீ விபத்துக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை.
இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.