உள்ளூர் செய்திகள்

நடைபயிற்சி சென்ற மூதாட்டியிடம் 7 பவுன் நகை பறிப்பு

Published On 2023-06-17 07:52 GMT   |   Update On 2023-06-17 07:52 GMT
  • விருதுநகர் அருகே நடைபயிற்சி சென்ற மூதாட்டியிடம் 7 பவுன் நகை பறிக்கப்பட்டது.
  • இந்த சம்பவம் குறித்து விருதுநகர் மேற்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர்

விருதுநகர் லட்சுமிநகரை சேர்ந்தவர் கதிரேசன். இவரது மனைவி செல்லாச்சி (வயது76). இவரும், இவரது வீட்டின் அருகில் வசிக்கும் 2 பெண்களும் புல்லலக் கோட்டை சாலையில் இன்று காலை நடைபயிற்சி சென்றனர். முனியசாமி கோவில் அருகே சென்ற போது அங்குள்ள பாலத்தில் 2 மர்ம நபர்கள் அமர்ந்திருந்தனர்.

அந்த நபர்கள் நடைபயிற்சி சென்று கொண்டிருந்தவர்களை நோட்டமிட்டபடி இருந்துள்ளனர். செல்லாச்சி மற்றும் உடன் வந்த பெண்கள் அதனை கண்டு கொள்ளாமல் தொடர்ந்து சென்றுள்ளனர். பாலத்தில் இருந்து இறங்கி செல்லும்போது சற்று இடைவெளி விட்டு சென்றுள்ளனர். அப்போது அந்த மர்மநபர்கள் அவர்களின் பின்னால் வந்துள்ளனர்.

திடீரென மர்மநபர்கள் செல்லாச்சி கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்க செயினை பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டனர். செல்லாச்சி மற்றும் உடன் வந்த பெண்கள் கூச்சலிட்டனர். ஆனால் அருகில் யாரும் இல்லாததால் மர்மநபர்களை பிடிக்க முடியவில்லை. இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

விருதுநகர் மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு பவித்ரா, பாண்டியன்நகர் போலீஸ் நிலைய இன்ஸ் பெக்டர் மாரிமுத்து, விருதுநகர் மேற்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் மாரியப்பன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் குறித்து மேலும் விசாரணை நடந்து வருகிறது.

Tags:    

Similar News