உள்ளூர் செய்திகள்

திருச்சி மத்திய சிறையில் இன்று அமலாக்கத்துறை விசாரணை

Published On 2022-07-21 08:22 GMT   |   Update On 2022-07-21 08:22 GMT
  • வெளிநாட்டினரின் சட்டவிரோத பண பரிவர்த்தனை தொடர்பாக விசாரணை நடப்பதாக கூறப்பட்டது.
  • சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களில் ஒரு சிலரை அமலாக்கத்துறையினர் தங்களது கஸ்டடியில் எடுத்து விசாரிப்பதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

திருச்சி:

தமிழ்நாட்டிலேயே திருச்சி மத்திய ஜெயிலில் மட்டும்தான் வெளிநாட்டினருக்கான சிறப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது.

இதில் போலி பாஸ்போர்ட், போதைப்பொருள் கடத்தல், கள்ளத்தோணியில் இந்தியா வந்தடைதல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய வெளிநாட்டவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். அதிக எண்ணிக்கையில் இலங்கையை சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள்.

இந்த நிலையில் திருச்சி மத்திய ஜெயில் வளாகத்தில் அமைந்துள்ள சிறப்பு முகாமில் நேற்று தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் சுமார் 13 மணி நேரம் தொடர்ச்சியாக சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் பல்வேறு 57 பவுன் நகை, ரூ 2 லட்சம் ரொக்கம், ஆவணங்கள் மற்றும் செல்போன்கள், வைபை மோடம், லேப்டாப் உள்ளிட்டவைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

அந்த பரபரப்பு அடங்குவதற்குள் நிலையில் இன்று அமலாக்கத்துறையை சேர்ந்த 4 டெல்லி அதிகாரிகள் சிறப்பு முகாமிற்கு இன்று காலை 10.30 மணி அளவில் வருகை தந்தனர். பின்னர் அவர்கள் முகாமிற்குள் அதிரடியாக சென்று சோதனை நடத்தி வருகிறார்கள்.

வெளிநாட்டினரின் சட்டவிரோத பண பரிவர்த்தனை தொடர்பாக விசாரணை நடப்பதாக கூறப்பட்டது. என்.ஐ.ஏ. குழுவினரை போன்று இவர்களும் உள்ளூர் போலீசார் மற்றும் ஜெயில் அதிகாரிகளை வெளியேற்றிவிட்டு சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இதில் தற்போது சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களில் ஒரு சிலரை அமலாக்கத்துறையினர் தங்களது கஸ்டடியில் எடுத்து விசாரிப்பதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. என்.ஐ.ஏ.வை தொடர்ந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் ஜெயில் சிறப்பு முகாமில் சோதனையில் ஈடுபட்டிருப்பது பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News