செய்திகள்
கோப்புபடம்

செங்கல்பட்டு அருகே வாலிபர் வெட்டிக்கொலை

Published On 2021-07-25 11:38 GMT   |   Update On 2021-07-25 11:38 GMT
செங்கல்பட்டு அருகே வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். உறவினரை போலீசார் தேடி வருகின்றனர்.
செங்கல்பட்டு:

செங்கல்பட்டு அடுத்த அம்மனம்பாக்கம் இருளர் பகுதியை சேர்ந்தவர் கன்னியம்மாள். இவரது 3-வது மகளான அனிதாவின் கணவர் முரளி (வயது 25). இவரது தாய்மாமா தினேஷ் (வயது 35). அரக்கோணம் தாலுகா ராணிப்பேட்டையை சேர்ந்தவர். சென்னையில் வேலை தேடலாம் என்று கூறி முரளி, தாய்மாமா தினேஷை அம்மனம்பாக்கத்திற்்கு வரும்படி அழைத்தார்.

இதையடுத்து தினேசும் அம்மனம்பாக்கத்திற்கு வந்தார். நேற்று தினேஷ், முரளி இருவரும் ஒன்றாக சேர்ந்து முரளி வீட்டில் இருந்து மது குடித்தனர். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதில் முரளி வீட்டில் இருந்த கத்தியால் தினேஷின் தலையில் வெட்டியுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த தினேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மாலை முரளியின் மாமியார் கன்னியம்மாள் வீட்டுக்கு வந்தபோது வீடு பூட்டப்பட்டிருந்தது. இது குறித்து அக்கம்பக்கத்தினரிடம் கேட்டார். யாரும் சரியாக பதில் சொல்லாததால் வீட்டின் பூட்டை உடைத்து பார்த்தார்.

அப்போது போர்வை போர்த்தப்பட்டு ஒருவர் படுத்திருப்பதை கண்டு போர்வையை விலக்கி பார்த்தார். ரத்த வெள்ளத்தில் தினேஷ் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த கன்னியம்மாள் செங்கல்பட்டு தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான முரளியை வலைவீசி தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News