செய்திகள்
குத்தாலம் அருகே விஷம் குடித்த தொழிலாளி பலி
குத்தாலம் அருகே விஷம் குடித்த தொழிலாளி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
குத்தாலம்:
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி சாத்தனூர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் தேவராயன் (வயது 30). இவர் மயிலாடுதுறையில் உரக்கடை ஒன்றில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்தநிலையில் கடந்த 12-ந் தேதி வேலைக்கு செல்வதாக சொல்லி சென்றவர் மாலை வீட்டிற்கு வரவில்லை. வாணாதிராஜபுரம் பஸ் நிறுத்தம் அருகே தேவராயன் மது போதையில் கிடப்பதாக போன் மூலம் அவரது குடும்பத்தினருக்கு தகவல் வந்துள்ளது.
உடனே உறவினர்கள் சம்பவ இடத்திற்கு சென்று அவரை மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் விஷத்தை குடித்து விட்டதாக கூறியுள்ளார். இதையடுத்து அவரை மேல் சிகிச்சைக்காக தஞ்சை தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அப்போது அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்தநிலையில் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி தேவராயன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் குத்தாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார்கள்.