செய்திகள்
இடத்தை விற்பது தொடர்பாக தகராறு: மனைவியை தாக்கிய கணவர் கைது
மயிலாடுதுறை அருகே இடத்தை விற்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் மனைவியை தாக்கிய கணவரை போலீசார் கைது செய்தனர்.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை அருகே திருவிழந்தூர் பல்லவராயன்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 45). இவருடைய மனைவி வனிதா (34). சம்பவத்தன்று பாலகிருஷ்ணன் தனக்கு சொந்தமான இடத்தை தனது அண்ணனுக்கு விற்பதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளார்.
இதனை அறிந்த வனிதா தனது கணவர் பாலகிருஷ்ணனிடம் எதற்காக இடத்தை விற்பனை செய்கிறீர்கள். அந்த இடத்தை விற்பனை செய்யக்கூடாது என்று தெரிவித்துள்ளார். இதனால் வனிதாவிற்கும் பாலகிருஷ்ணனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அப்போது பாலகிருஷ்ணன், வனிதாவை தாக்கியுள்ளார். இதில் வனிதாவின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. காயமடைந்த வனிதா மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
இந்த சம்பவம் தொடர்பாக வனிதா கொடுத்த புகாரின் பேரில் மயிலாடுதுறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் பாலகிருஷ்ணனை கைது செய்த போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.