செய்திகள்
கொள்ளிடம் அருகே ஆர்ப்பாக்கம் கிராமத்தில் 8 பேரை கடித்த குரங்குகளால் பொதுமக்கள் அச்சம்
கொள்ளிடம் அருகே ஆர்ப்பாக்கம் கிராமத்தில் 8 பேரை கடித்து குதறிய குரங்கை பிடிக்க வனத்துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொள்ளிடம்:
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே ஆர்ப்பாக்கம் கிராமம் மந்தக்கரை பகுதியில் குளம் உள்ளது. இந்த குளத்தை சுற்றி வீடுகள் உள்ளன. இந்தநிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இரண்டு குரங்குகள் ஆர்ப்பாக்கம் கிராமத்துக்குள் வந்தன. இந்த குரங்குகள் அந்த கிராமத்தை சுற்றியுள்ள மரங்களில் தங்கி அங்கு கிடைக்கும் உணவுகளை சாப்பி்ட்டு வந்தன. சில நேரங்களில் அந்த பகுதியில் உள்ள வீடுகளுக்குள் நுழைந்து பொருட்களை எடுக்க முயலும் போது வீ்ட்டில் உள்ளவர்கள் விரட்டும்போது திடீரென குரங்குகள் மேலே பாய்ந்து கடித்து விடுகின்றன.
ஆர்ப்பாக்கம் கிராமம் மந்தகரை பகுதியில் நேற்று வெங்கட்ராமன் (வயது 51) என்பவருடைய வீட்டு தோட்டத்திற்கு வந்த குரங்குகள், திடீரென கொல்லைபுறம் வழியாக வீட்டிற்குள் நுழைய முயன்றுள்ளது. உடனே அவற்றை வெங்கட்ராமன் விரட்டினார். இதனால் ஆத்திரம் அடைந்த குரங்கு, அவர் மீது பாய்ந்து கடித்து குதறியது. இதனால் அவர் அலறியடித்து ஓடினார்.
இதேபோல் நேற்று முன்தினம் வெங்கட்ராமனின் மனைவி பானுமதி (48). மகன்கள் ராஜேஷ் (26), விக்னேஷ் (20) ஆகியோரையும் கடித்துள்ளது. இதேபோல் அந்த பகுதியை சேர்ந்த பானு (35), விஜயலட்சுமி (20), அஸ்வின் (13) சாரதா (60) ஆகியோரையும் கடித்துள்ளது. இவர்கள் அனைவரும் சீர்காழி அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.
இதுகுறித்து ஆர்ப்பாக்கம் கிராம மக்கள் கூறுகையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இந்த கிராமத்துக்கு 2 குரங்குகள் வந்தன.
இந்த குரங்குகள் வீடுகளுக்குள் புகுந்து வீட்டில் தின்பண்டங்கள் இருந்தால் அவற்றை எடுத்து சென்று விடும். ஆனால் அப்போது யாரையும் கடிக்கவில்லை. கடந்த 10 நாட்களாக இந்த குரங்குகள் விரட்டுபவர்களை துரத்தி வந்து கடித்து விடுகிறது.
இதுகுறித்து உரிய அதிகாரிகளுக்கு தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே உடனடியாக நடவடிக்கை எடுத்து வனத்துறையினர் வந்து கூண்டு வைத்து குரங்குகளை பிடிக்க வேண்டும் என்று அந்த கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இந்த 2 குரங்குகளால் கிராம மக்களே அச்சத்தில் உள்ளனர்.