சீர்காழி அருகே தூக்கு மாட்டிய நிலையில் செங்கல் சூளை தொழிலாளி பலி
சீர்காழி:
சீர்காழி அருகே நிம்மேலி நடுத்தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் ( வயது 40). இவர் நெப்பத்தூரில் உள்ள தனியார் செங்கல் சூளையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 2 வாரத்திற்கு முன்னர் வேலையை விட்டு நிறுத்தப்பட்டாராம். தொடர்ந்து வேலை செய்த நாட்களில் வரவேண்டிய சம்பள பாக்கியை கேட்டு அவ்வபோது வந்து செல்வதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நள்ளிரவு 2 மணி அளவில் செங்கல் சூளைக்கு வந்த சீனிவாசன் அங்கிருந்த மற்ற தொழிலாளர்களிடம் பேசிவிட்டு சென்றாராம். இன்று அதிகாலை இரவு பணி முடித்து வந்த தொழிலாளிகள் செங்கல் சூளையில் செங்கல்லை காயவைக்கும் பகுதியிலுள்ள செட்டில் சீனிவாசன் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ந்தனர்.
இதுகுறித்து திருவெண்காடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கபட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். தகவலறிந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், சீனிவாசன் சாவில் மர்மம் இருப்பதாக கூறி மங்கை மடம் சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மறியலில் ஈடுப்பட்டவர்களிடம் சீர்காழி தாசில்தார் ஹரிதரன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். தொடர்ந்து அப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.