செய்திகள்
கவர்னர் கிரண்பேடி

பொது தொடர்புகளில் சமூக இடைவெளியை கவனிக்க வேண்டும்- கவர்னர் அறிவுறுத்தல்

Published On 2020-07-10 06:01 GMT   |   Update On 2020-07-10 06:01 GMT
பொதுத் தொடர்புகளில் சமூக இடைவெளியை கவனிக்க வேண்டும் என்று பொதுமக்களை கவர்னர் கிரண்பேடி அறிவுறுத்தி உள்ளார்.
புதுச்சேரி:

புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

காரைக்காலில் ஒரு கைரேகை ஜோதிடம் பார்ப்பவரின் வழியாக 13 நபர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவருடைய அறியாமையால் மற்றவர்களுக்கும் தொற்று பரப்பி உள்ளார். அவருக்கான சிகிச்சையை அவரே வீட்டில் எடுத்து வருகிறார். புதுச்சேரியில் மற்றொருவர் வீடு, வீடாக சென்று பிரசாதம் வழங்கியுள்ளார். இறுதியாக அவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அவரை சார்ந்தோருக்கு தொற்று பரவ இவர் காரணமாகி விட்டார். கொரோனாவை எதிர்த்து போராடுவதற்கு நாம் பாதுகாப்பு வழிமுறையை பின்பற்ற வேண்டும்.

மேலும் சிலருக்கு கொரோனா தொற்று நோயாளிகளின் வழியாகவும், சிறிய மதுபான விருந்துகள், ஒரு சிலருடைய வீட்டில் நடந்த பொதுவான விருந்துகளில் பங்கேற்றதால் பரவியது தெரிய வந்துள்ளது. ஒவ்வொரு தொழிற்சாலை அல்லது நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு கொரோனாவுக்கு எதிரான பாதுகாப்பு வழிமுறையை பின்பற்றுவதில் குறைபாடு ஏற்பட்டால் அதன் மேலாளர்களே பொறுப்பேற்க வேண்டும். மேலும் பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு பதியப்படும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஒரு முககவச தொழிற்சாலையில் மிக அதிகமான கொரோனா பரவலை ஏற்படுத்தியதை போல மீண்டும் நடக்கக்கூடாது.

தொற்று பரவுவதை தடுப்பது நம் கையில் தான் இருக்கிறது. நம்மை பாதுகாத்துக் கொள்வதால் மற்றவர்களையும் பாதுகாக்க முடியும். இது அப்படியே நேர்மாறாகவும் பொருந்தும். அனைத்து பொதுத் தொடர்புகளிலும் சமூக இடைவெளியை கவனிக்க வேண்டும். மேலும் பொழுதுபோக்கிற்காக தெரிந்த வெளி நபர்களை வீட்டிற்குள் அனுமதிக்க வேண்டாம். வெளியில் இருந்து வருபவர்களுக்கு காய்ச்சல் அறிகுறி உள்ளதா? என்பதை நீங்கள் அறிய முடியாது. ஒரு வேளை அவர்கள் காய்ச்சலை குறைப்பதற்கு வீட்டிலேயே மருந்து எடுத்துக்கொண்டிருக்கலாம். எனவே கவனமாக இருங்கள்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News