செய்திகள்
மதுபானம்

புதுச்சேரியில் பார்களை மூட அரசு உத்தரவு

Published On 2020-03-19 08:46 IST   |   Update On 2020-03-19 08:46:00 IST
புதுச்சேரியில் மதுபார்கள் அனைத்தும் வருகிற 31-ந்தேதி வரை மூடப்படுகிறது. மொத்த மற்றும் சில்லரை மதுபான கடைகள் செயல்படும்.
புதுச்சேரி:

புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

புதுவையில் கொரோனா வைரஸ் தாக்குதல் தடுப்பு தொடர்பான ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி மக்கள் அதிகம் கூடும் இடங்களான தியேட்டர்கள், வணிக வளாகங்கள் நேற்று (புதன்கிழமை) முதல் மூடப்பட்டன. மது பார்களை மூடுவது குறித்தும் ஆலோசனை தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் இன்று முதல் (வியாழக்கிழமை) மதுபார்கள் (மது அருந்தும் இடம்) அனைத்தும் வருகிற 31-ந்தேதி வரை மூடப்படுகிறது. அதே நேரத்தில் மொத்த மற்றும் சில்லரை மதுபான கடைகள் செயல்படும்.

மாகி பிராந்தியத்தில் மூதாட்டி ஒருவர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளார். வெளிநாட்டிற்கு புனித பயணங்கள் சென்று வந்துள்ள அவருக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மாகி பிராந்தியத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு மேற்கொள்ள உள்ளோம். இதற்காக நானும், சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடிகிருஷ்ணாராவும் மாகிக்கு செல்ல உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News