சேதராப்பட்டு அருகே முக்கிய பிரமுகரை கொல்ல சதித்திட்டம்- ரவுடி உள்பட 5 பேர் சிறையில் அடைப்பு
சேதராப்பட்டு:
சேதராப்பட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் அந்த வழியாக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சேதராப்பட்டு தொழிற்பேட்டை அருகில் ஒரு கும்பல் பதுங்கி இருந்தது.
இதனையறிந்த போலீசார் அந்த கும்பலை சுற்றி வளைத்து பிடித்தனர். அப்போது அவர்களிடம் 3 அரிவாள்கள் இருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்திய போது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் வானரப்பேட்டையை சேர்ந்த ரவுடியான மணிகண்டன் என்கிற குட்டி மணி, நைனார்மண்டபம் பிரியதர்ஷினி நகரை சேர்ந்த மதியழகன் (வயது23), தேங்காய்திட்டை சேர்ந்த சரவணன் (24), பிரான்சுவா தோட்டத்தை சேர்ந்த பொன்னுசாமி (60), அதே பகுதியை சேர்ந்த ஏசுராஜ்டேவிட் என்பதும் இவர்கள் ஒரு முக்கிய பிரமுகரை கொலை செய்யும் நோக்கத்தில் அப்பகுதியில் பதுங்கி இருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 3 அரிவாள்களை பறிமுதல் செய்தனர். மேலும் அந்த கும்பலை கோர்ட்டில் ஆஜர் படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.
மணிகண்டன் என்கிற குட்டி மணி என்பவர் ஜெகன் மற்றும் சாணிகுமார் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர் என்பதும் இவர் மீது 3 கொலை வழக்கு உள்பட 7 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.