செய்திகள்
மணக்குள விநாயகர் கோவிலில் பக்தர்களுக்கு விபூதியிட குருக்களுக்கு தடை
புதுவையில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மணக்குள விநாயகர் கோவிலில் பக்தர்களுக்கு விபூதியிட குருக்களுக்கு நிர்வாகம் தடை விதித்துள்ளது.
புதுச்சேரி:
புதுவையில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஆன்மிக சுற்றுலா நகரான புதுவைக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். திருநள்ளாறு கோவிலில் நளதீர்த்தத்தில் பக்தர்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. புதுவை மணக்குள விநாயகர் கோவிலுக்கு வெளிநாட்டிலிருந்து வரும் பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டிலிருந்து வரும் பக்தர்கள் 28 நாட்களுக்கு பிறகு மணக்குள விநாயகர் கோவிலுக்கு வரவும் என கோவில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில் புதுவை மணக்குள விநாயகர் கோவிலில் கெட்ட கிருமிகளை அழிக்க காலை, மாலை இரு வேளையிலும் சிறப்பு சாம்பிராணி புகை போடப்படுகிறது. மேலும் பக்தர்களுக்கு நெற்றியில் குங்குமம், விபூதியிடுவதற்கு கோவில் குருக்களுக்கு நிர்வாகம் தடை விதித்துள்ளது.