செய்திகள்
கொரோனா அச்சுறுத்தலால் எல்கேஜி முதல் 5ம் வகுப்பு வரை நாளை முதல் விடுமுறை -புதுச்சேரி அரசு
கொரோனா வைரஸ் காரணமாக, புதுச்சேரியில் எல்.கே.ஜி. முதல் 5-ம் வகுப்பு வரை நாளை முதல் மறு அறிவிப்பு வரும் வரை விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
புதுச்சேரி:
சீனாவின் வுகான் நகரில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி கடும் பீதியை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரஸ் இந்தியாவையும் கடுமையாக பாதித்துள்ளது.
இதற்கிடையே, கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் அனைத்து மழலையர் பள்ளிகளுக்கும் மார்ச் 31ம் தேதி வரை விடுமுறை அறிவித்துள்ளது. மேலும், கேரளா மாநிலம் எல்லையோரத்தில் உள்ள 7 மாவட்டங்களில் தொடக்க பள்ளிகளுக்கு மார்ச் 31வரை விடுமுறை விடப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக, புதுச்சேரியில் எல்.கே.ஜி. முதல் 5-ம் வகுப்பு வரை நாளை முதல் மறு அறிவிப்பு வரும் வரை விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதுதொடர்பாக அமைச்சர் கமலக்கண்ணன் கூறுகையில், கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுச்சேரியில் அரசு, தனியார் பள்ளிகள், சிபிஎஸ் இ பள்ளிகள் அனைத்திலும் 5-ம் வகுப்பு வரை விடுமுறை அறிவித்துள்ளது.
மறு அறிவிப்பு வரும் வரை மழலையர் பள்ளிகள், தொடக்க பள்ளிகளுக்கு நாளை முதல் விடுமுறை விடப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.