செய்திகள்

திருக்கனூரில் மாணவியை மானபங்கம் செய்ய முயன்ற வாலிபர் கைது

Published On 2017-03-16 10:49 GMT   |   Update On 2017-03-16 10:49 GMT
திருக்கனூரில் பிளஸ்-2 மாணவியை மானபங்கம் செய்ய முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
திருக்கனூர்:

திருக்கனூர் தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்த ஒரு மாணவி நேற்று மாலை பள்ளியில் நடந்த சிறப்பு வகுப்பில் கலந்து கொண்டு விட்டு வீட்டுக்கு நடந்து சென்று கொண்டு இருந்தார்.

அங்குள்ள இந்தியன் வங்கி வழியாக சென்றபோது, திடீரென ஒரு வாலிபர் மாணவியின் வாயை பொத்தி மானபங்கம் செய்ய முயன்றார். இதனால் அந்த மாணவி அலறினார்.

அதே நேரத்தில் மாணவியை அழைத்து செல்ல அவரது அண்ணன் அந்த வழியாக வந்து கொண்டு இருந்தார். தங்கையின் அலறல் சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அந்த வாலிபரை விரட்டி சென்று பிடித்தார். பின்னர் திருக்கனூர் போலீசில் ஒப்படைத்தனர்.

போலீசார் விசாரணை நடத்திய போது அந்த வாலிபர் திருக்கனூர் அருகே தமிழக பகுதியான சித்தலம்பட்டு ரெட்டியார் வீதியை சேர்ந்த கார்த்திக் (வயது 24) என்பது தெரிய வந்தது. இதையடுத்து கார்த்திக்கை போலீசார் கைது செய்தனர்.

Similar News