தோஷ பரிகாரங்கள்
null

தொழில் வளர்ச்சி, கடன் பிரச்சினைக்கு தீர்வு தரும் ஆத்மநாதவனம் சமுக்தியாம்பிகை கோவில்

Published On 2022-10-03 03:47 GMT   |   Update On 2022-10-03 05:16 GMT
  • பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள சரபேஸ்வரர் சிலை, சித்தர்களால் வழங்கப்பட்டது.
  • இந்த கோவிலில் ஸ்ரீ சக்கரம் புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டம் அங்கலக்குறிச்சியில் மேற்கு தொடர்ச்சி மலை சாரலில் எழில் மிகு இயற்கை சூழலில் மூலிகைகள் நிறைந்த தாடகை மலை அடிவாரத்தில் அமைந் துள்ளது ஆத்மநாதவனம். இங்கு சமுக்தியாம்பிகை, கால சம்ஹார பைரவர், சரபேஸ்வரர் தனித்தனி சன்னதியில் அருள்பாலிக்கின்றனர். சித்த வழிபாட்டு முறையை பின்பற்றும் இத்திருக்கோவிலில் அருஉருவமாய் இருக்கும் சித்தர் நடராஜ யாகவ குருவின் வழிகாட்டுதலின்படி பூஜைகள் நடைபெறுகிறது.

இக்கோவிலில் சித்தர் நடராஜ யாகவர் அருஉருவமாய் இருந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பதாகவும், சித்த புருஷர்களின் இருப்பை உணர முடிவதாகவும் பக்தர்கள் கூறுகின்றனர். இக்கோவிலின் மூலக்கோவிலானது ஆத்மநாதவனத்தில் இருந்து சுமார் 5.கி.மீ. தொலைவில் கோட்டூர் மலையாண்டி பட்டினத்தில் ஜோதி வடிவாக காட்சி தருவதாக பக்தர்கள் நம்புகின்றனர்.

அருள்மிகு சமுக்தியாம்பிகை

அத்திருக் கோவிலின் முதன்மை தெய்வம் "அருள்மிகு சமுக்தியாம்பிகை". 9 அடி உயரத்திலான அழகிய சிலா ரூபத்துடன் அருள்பாலிக்கிறார். இங்கு அம்பிகை க்கு நித்யபடி நடைபெறும் அபிஷேகங்கள் யாரும் காண முடியாத வண்ணம் திரையிட்டே நடத்தப்படுகிறது. இங்கு அம்பிகைக்கு வருடத்தின் குறிப்பிட்ட நாட்களில் 6 சிறப்பு மஹா அபிஷேகங்கள் நடத்தப்படுகிறது. கார்த்திகை மாதம் வளர்பிறை தசமி திதியில் பழச்சாறுகளைக் கொண்டு நடத்தப்படும் மானசாபி ஷேகம் மட்டுமே பக்தர்களால் காண முடியும். இங்கு அம்பிகைக்கு தேங்காய் மாலை வழிபாடு பக்தர்களால் நடத்தப்படுகிறது. இவ்வழிப்பாட்டின் மூலம் திருமணத்தடை நீக்கி, குழந்தையின்மை நீங்குவதாக பக்தர்கள் கூறுகின்றனர்.

கால சம்ஹார பைரவர்

இக்கோவிலின் பைரவ மூர்த்தியானவர் 8 அடி உயரத்தில் 8 கைகளுடன் நின்ற திருக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். எங்கும் காணமுடியாத வண்ணம் பைரவரின் நாய் வாகனமானது சுவாமியின் திருமுகத்தை பார்த்தபடி இருப்பது தனிச்சிறப்பாகும். இங்கு பிரதிமாதம் தேய்பிறை அஷ்டமி அன்று காலை 11 மணிக்கும் மற்றும் 4 மணிக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடை பெறுகிறது.

அஷ்டமி இரவு 7.50-க்கு நடைபெறும் அர்த்த ஜாம பூஜையின் போது சித்தர்கள் வருவதாகவும் அதனை அங்கு பரவும் நறுமணம் மூலம் உணர்வதாகவும் பக்தர்கள் கூறுகின்றனர். தேய் பிறை அஷ்டமியன்று திரளாக பக்தர்கள் பூசணி தீபம் ஏற்றியும், பாலாபிஷேகம் செய்தும், தொழில் தடை, கல்வித்தடை, கடன் மற்றும் பணப்பிரச்சினைகளிலிருந்து விடுபட வழிபாடு செய்கின்றனர். கார்த்திகை மாதம் வரும் காலாஷ்டமி வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.

கோரிக்கை தேங்காய் வழிபாடு

தேய்பிறை அஷ்டமியன்று மட்டையுடன் கூடிய முழுத் தேங்காயை பைரவரிடம் சமர்பித்து தங்களது கோரிக்கையை பிரார்த்திக்கின்றனர். பின்னர் அத்தேங்காயை வீட்டிற்கு எடுத்துச் செல்கின்றனர். அக் கோரிக்கை நிறைவேறிய பின்பு அந்த தேங்காயை மீண்டும் கோவிலில் செலுத்தி வேண்டு தலை நிறைவேற்று கின்றனர்.

இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள சரபேஸ்வரர் சிலை, சித்தர்களால் வழங்கப்பட்டது. இவ்விக்கிரகம் போல் வேறு எங்கும் இல்லை என்பது தனிச்சிறப்பாகும். நீரால் சூழப்பட்டுள்ள சிறு கரு வறையில் சரபேஸ்வரர் அருள்பாலிக்கிறார். ஒரு சிறு பாலத்தின் வழியே அர்ச்சர்கள் சென்று பூஜை செய்கின்றனர். உடல், மனநோய் மற்றும் கெட்ட சக்திகளின் தொல்லையில் இருந்து விடுபடவும் பவுர்ணமி இரவில் பல மூலிகைகளால் ஆன அவுஷதா அபிஷேகம் நடைபெகிறது.

இந்த அவுஷதா அபிஷேகம் இக்கோவிலில் மட்டுமே நடைபெறுவது தனிச்சிறப்பாகும். பல்வேறு மூலிகைகளைக் கொண்டு கோவிலிலேயே தயாரிக்கப்படும் பச்சை நிற குங்குமம் அம்பிகையின் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இங்கு தேய்பிறை அஷ்டமி, ஜாம பூஜை மற்றும் பவுர்ணமியன்று வழங்கப்படும் சித்த மூலிகை தீர்த்தம் பல நோய்களுக்கு அருமருந்தாக விளங்குகிறது. பொள்ளாச்சியில் இருந்து ஆழியார் மற்றும் கோட்டூர் செல்லும் பஸ்களின் மூலம் அங்கலக்குறிச்சி சென்று அங்கிருந்து ஆட்டோ, கார் மற்றும் நடைப்பயணம் மூலம் ஆத்மநாதவனத்தை அடையலாம்.

ஆலய தொடர்புக்கு- 94895 09305 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இந்த கோவிலில் ஸ்ரீ சக்கரம் புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீ சக்கரத்தை வணங்கினால் எண்ணிய காரியங்கள் நிறைவேறும் என்பது ஐதீகம்.

Tags:    

Similar News