தோஷ பரிகாரங்கள்

பூஜை அறையும் வாஸ்துவும்...

Published On 2023-02-04 06:14 GMT   |   Update On 2023-02-04 06:14 GMT
  • நம் வீட்டிலும் பூஜை அறையை ஈசான மூலையில் அமைக்கலாம்.
  • ஈசான மூலை அடைபட்டதாக இருக்கக் கூடாது.

பூஜை அறை என்றாலே நம் எல்லோர் நினைவுக்கும் உடனே வருவது ஈசானிய மூலை. காரணம் இறைவன் உறையும் இடம் ஈசானிய மூலை எனலாம். நம்முடைய பூமிப்பந்தும் வடகிழக்கு பக்கமாகத்தான் சாய்ந்து இருக்கிறது.

பிரபஞ்சத்திலிருந்து ஆவாரம் ஆற்றலும் வடக்கிழக்கின் வழியே தான் மற்ற இடங்களுக்கு பரவுகிறது எனவும் கூறுவர். கோவில்களில் யாகசாலை அமைக்கும் போது ஈசான மூலையை வடகிழக்கு மூலையை தெரிவு செய்வார்கள் என்பதை பார்க்கின்றோம்.

எனவே நம் வீட்டிலும் பூஜை அறையை ஈசான மூலையில் அமைக்கலாம். பொதுவாக ஈசான மூலை வளர்ந்திருந்தால் சிறப்பு. இந்த ஈசானி மூலையில் கடவுள் படங்களை கிழக்கு நோக்கி வைக்கலாம் அல்லது வடக்கு நோக்கி வைக்கலாம். ஈசான மூலை அடைபட்டதாக இருக்கக் கூடாது நல்ல காற்றோட்ட வசதி உள்ளதாக இருத்தல் சிறப்பு. குறிப்பாக கிழக்கில் இருந்து சூரியக்கதிர்கள் ஈசான மூலைக்குள் வருவது நல்லது.

இவ்வாறு ஈசான மூலையில் பூஜையறை அமைக்க இயலவில்லை என்றால் வீட்டின் கிழக்கு பக்கத்தில் அதாவது வடகிழக்கு தென்கிழக்கு நடுவில் பூஜை அறை அமைக்கலாம். இதற்கும் வாய்ப்பு குறைவாக இருப்பின் வடக்கு திசை அதாவது வடகிழக்கு வடமேற்கு இரண்டிற்கும் இடைப்பட்ட இடத்தில் பூஜை அறை அமைக்கலாம். மேற்படி எந்த இடத்தில் அமைத்தாலும் பூஜை மாடம் கிழக்கு நோக்கி அல்லது வடக்கு நோக்கி இருத்தல் சிறப்பு.

வாஸ்து முறைப்படி படிக்கட்டுகள்

ஒரு வீட்டில் படிக்கட்டுகள் மிக முக்கிய இடத்தை வகிக்கிறது. வெளியில் இருந்து வீட்டுக்கு செல்லும் படிக்கட்டுகள், வெளிப்பகுதியை வீட்டின் உட்பகுதியோடு இணைக் கிறது. ஒரு தளத்திலிருந்து இன்னொரு தளத்திற்கு செல்லும் படிக்கட்டுகள் இரண்டு தளங்களை இணைக்கிறது. இவ்வாறு தொடர்பு பாலங்களாக விளங்கும் படிக்கட்டுகள் வாஸ்துவில் முக்கிய இடம் பெறுகிறது. கட்டிடக்கலை வல்லுனர்களும் கட்டுமான பொறியாளர்களும் வாஸ்து சாஸ்திர நிபுணர்களும் படிக்கட்டுகள் அமையும் இடத்தையும் அவை எத்திசை நோக்கி அமைக்கப்பட்டுள்ளது என்பதையும் கவனமாக கருத்தில் கொள்கின்றனர்.

வீட்டில் எப்பொழுதும் நல்ல மங்கலமான நேர்மறையான சக்தி நிறைந்திருக்க வேண்டும் எனும் கோணத்தில் வாஸ்து செயல்படுகிறது. வீட்டின் எல்லா பகுதிகளிலும் சமமான நேர்மறை சக்தி இணக்கமாக விளங்க வேண்டும் என்பதில் வாஸ்து சாஸ்திரம் மிகுந்த அக்கறை காட்டுகிறது. எனவே தான் படிக்கட்டுகள் அமைப்பதில் வாஸ்துவின் பங்கு மிக முக்கியமாகிறது.

வீட்டின் தென்கிழக்கு பகுதியில் படிக்கட்டுகள் அமையும் என்றால் கிழக்கு பார்த்தவாறு இருக்க வேண்டும். தென்மேற்கில் அமைகிறது என்றால் மேற்கை பார்த்தவாறு அமைய வேண்டும். வடமேற்கில் அமைந்தால் வடக்கு திசை பார்த்தவாறு அமைய வேண்டும். வடகிழக்கில் மாடிப்படி அமைவதை தவிர்க்கலாம்.

Tags:    

Similar News