தேசிய விருதுகள்.. தசாப்தத்தின் மிக மோசமான தேர்வு காஷ்மீர் ஃபைல்ஸ்... பி.சி.ஸ்ரீராம் காட்டம்!
- ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம் தேசிய விருது வென்றவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
- காஷ்மீர் ஃபைல்ஸ் படத்திற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டதற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கண்டனம்.
இந்திய அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த படங்கள், நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் அடங்கிய திரைத் துறை சார்ந்தவர்களுக்கு தேசிய திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி 69-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் நடைபெறவுள்ளது. இந்த விழாவில் 2021-ஆம் ஆண்டிற்கான விருதுகள் வழங்கப்படவுள்ளன. இதையடுத்து தேசிய விருது பெறும் படங்களின் பட்டியல் நேற்று வெளியானது.
இதில் தேசிய விருது வென்றவர்களுக்கு பலதரப்பினரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். திரைத்துறை சார்ந்த பிரபலங்கள், நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள் தேசிய விருது வென்றவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த முறை தேசிய விருது அறிவிக்கப்பட்டதும், ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த படங்களுக்கு விருது அறிவிக்கப்படாததற்கு ஏமாற்றத்தையும், வருத்தத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.
மேலும் பலர், இந்த படத்திற்கு விருது அறிவிக்கப்பட்டு இருக்கக் கூடாது என்று சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில், தேசிய விருது வென்றவர்களுக்கு நாட்டின் முன்னணி ஒளிப்பதிவாளரான பி.சி. ஸ்ரீராம் தேசிய விருது வென்றவர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து எக்ஸ் (முன்பு டுவிட்டர்) தளத்தில் அவர் பதிவிட்டுள்ளார். அதில், "தேசிய விருது வென்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். இந்த தசாப்தத்தின் மிக மோசமான படமாக காஷ்மீர் ஃபைல்ஸ் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறது," என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்திற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டு இருப்பதற்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.