சினிமா செய்திகள்

கனல் கண்ணன்

கனல் கண்ணனுக்கு விதிக்கப்பட்ட ஜாமீன் நிபந்தனை நிறுத்தி வைப்பு.. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..

Published On 2022-09-10 06:30 GMT   |   Update On 2022-09-10 06:30 GMT
  • பெரியார் சிலை குறித்து அவதூறு கருத்து தெரிவித்த புகாரில் சண்டை பயிற்சி கலைஞர் கனல் கண்ணன் கைது செய்யப்பட்டார்.
  • இவரது ஜாமீன் நிபந்தனைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

பிரபல சண்டை பயிற்சி கலைஞர் கனல் கண்ணன் சில தினங்களுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றில் பெரியார் குறித்து பேசியது சர்ச்சையை கிளப்பியது. அதில், உலகப் புகழ் பெற்ற திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் முன்பு இருக்கும் கடவுள் இல்லை என்று சொன்னவரின் சிலை என்றைக்கு உடைக்கப்படுகிறதோ அன்றுதான் ஹிந்துக்களின் உண்மையான எழுச்சி நாள் என்று திரைப்பட சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன் பேசியிருந்தார்.


கனல் கண்ணன்

இவரின் இந்த கருத்துக்கு பலரும் எதிர்ப்புகளும் ஆதரவுகளும் தெரிவித்து வந்தனர். இதையடுத்து பெரியார் சிலை குறித்து அவதூறு கருத்து தெரிவித்த புகாரில் சண்டை பயிற்சி கலைஞர் கனல் கண்ணனை பாண்டிச்சேரியில் வைத்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

பின்னர் இவருக்கு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி 4 வாரங்களுக்கு காலை, மாலையில் இருவேளை விசாரணை அதிகாரி முன்பு ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டது.


கனல் கண்ணன்

இந்நிலையில், கேரளாவில் நடைபெற உள்ள படப்பிடிப்பில் கலந்துகொள்ள வேண்டியுள்ளதால், ஜாமீன் நிபந்தனைகளை நிறுத்திவைக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் கனல் கண்ணன் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் தினமும் ஆஜராக வேண்டுமென்ற நிபந்தனையை இன்று (10-09-2022) முதல் 17-ந் தேதி வரை நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது.

Tags:    

Similar News